காஞ்சிபுரத்தில் 40ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாலை ஒரு மணியளவில் அத்திரவரதர் சிலை குளத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆனால், வரும் ஒன்றாம் தேதி தான் அந்தச் சிலை பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். உலகப் பிரசித்திப் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் திருவிழா நடைபெறுகிறது.
கடந்த 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தாண்டு வரும் 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு அத்திவரதர் திருவிழா நடைபெறவுள்ளதால், அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. மேலும், அத்திவரதர் திருவிழாவையொட்டி காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகள் 48 நாட்களும் அரை நாள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தகவல் பலகைகள் நகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளன.
5 இடங்களில் தற்காலிக பேருந்துநிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வடக்கு மண்டல காவல் ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.