தனியார் பள்ளிக்கு இடைத்தரகராக இருந்து ரூ.12.23 கோடி மோசடிக்கு உதவி... உதவிக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் உள்ள கிரீன் பார்க் இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் முனிரத்தினம், அந்தப் பள்ளியின் தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.
இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளியை துவங்கும் போது பள்ளிக்கு பங்குதாரர் தேவை என நாளிதழ்களில் விளம்பரம் செய்தார். அதன் பேரில் ஒரு பங்கு ரூ 25 லட்சம் என்ற வீதம் சுமார் 100 பேரிடம் பங்குத்தொகை வசூலித்து அவர் பள்ளி நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
நாளிதழ் விளம்பரத்தின் அடிப்படையில் கிரீன் பார்க் கல்வி நிறுவனத்தில் முதலீடு தொகையை ஈட்டுவதற்காக நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் (67), ஆலங்காயம் வட்டார உதவி கல்வி அலுவலர் சித்ரா (59), இவரது கணவர் செல்வம் (65) ஆகிய மூன்று பேரும் பங்குதாரர்களிடம் முதலீடை பெற்றுக் கொடுக்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இடைத்தரகர்கள் மூலமாக திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி, மணி, 23 நாகராஜ், சாமுண்டீஸ்வரி தேவி பாலா, சரவணன், இளங்கோ, ஸ்ரீதர், ராமசுந்தரம், ராஜம், கஜேந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரிடம் மொத்தம் 12 கோடியே 23 லட்சம் ரூபாயை முதலீடாக பெற்று கிரீன் பார்க் பள்ளி தாளாளர் முனிரத்தினத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் அவர், பங்குதாரர்களுக்கு 7 வருடங்களாக முதலீட்டிற்கு உண்டான லாபம் மற்றும் ஈவுத்தொகை எதுவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக தெரிய வருகிறது.
இதனால் அவர்கள் தருமபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், இடைத்தரகர்களாக செயல்பட்ட திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார உதவி கல்வி அலுவலர் சித்ரா, அவரது கணவர் செல்வம், நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகிய மூன்று பேரை கடந்த 17 ஆம் தேதி இரவு தருமபுரி குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் தேவராஜ் தலைமையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டார தொடக்க உதவி கல்வி அலுவலர் சித்ராவை பணியிடை நீக்கம் செய்து தொடக்கப்பள்ளி கல்வித்துறை இயக்குநர் நரேஷ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.