\
கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம்?

கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம்?

கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம்?
Published on

கொரோனா பரவல் காரணமாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை விதியின்படி 6 மாதத்திற்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதனால் வருகிற செப்டம்பர் 24-ம் தேதிக்குள் சட்டப்பேரவை கூட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது தலைமை செயலக வளாகத்தில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் மண்டபம் மிகவும் சிறியது ஆகும். 234 எம்.எல்.ஏ.க்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி அங்கு அமர முடியாது. இதனால் தலைமை செயலக வளாகத்தை விட்டு வெளியில்தான் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலை தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

அதனால், தற்போதுள்ள இடத்துக்கு மாற்று ஏற்பாடாக கலைவாணர் அரங்கத்தில் நடத்தலாமா என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இதையடுத்து, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்துக்கு நேற்று சபாநாயகர் தனபால் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பேட்டி அளித்த சபாநாயகர் தனபால், “சட்டப்பேரவை கூட்டம் கலைவாணர் அரங்கத்தில்தான் நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுத்த பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com