"தேசிய கட்சி என்பதால் பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்!" -அமைச்சர் செல்லூர் ராஜூ

"தேசிய கட்சி என்பதால் பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்!" -அமைச்சர் செல்லூர் ராஜூ
"தேசிய கட்சி என்பதால் பாஜகதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்!" -அமைச்சர் செல்லூர் ராஜூ

"பாஜக அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்" என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ”நாளை நடைபெறும் அதிமுக பிரசார பொதுக்கூட்டம் 2021 வெற்றியை நிர்ணயிக்கும் கூட்டமாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம். தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாடுகளில்கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால், தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்டப்பாஞ்சாயத்து ஒழிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சட்டமன்றதிலும் எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறு. 1980-ல் நாடாளுமன்றத்தில் அதிமுக 2 இடங்களை மட்டுமே பிடித்தது. ஆனால், சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்கும்” என்றார்.

கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறிவருவது குறித்து கேட்டதற்கு, "பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, அகில இந்தியக் கட்சி என்பதால், அவர்களின் கொள்கைப்படி அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார். கூட்டணியில் மாநில கட்சிகள் மட்டும் இருந்தால் மாநில கட்சிகள் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாம். ஆனால், மாநில கட்சிகளோடு அகில இந்தியக் கட்சிகள் கூட்டணியில் இருக்கும்போது, முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால் அகில இந்தியக் கட்சி அறிவிக்கும்” என்றார்.

அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு, "அழகிரி செயல்பாடு மதுரை மக்களுக்கு நன்கு தெரியும். அழகிரி தான் எடுக்கும் கொள்கையிலிருந்து மாறாத நிலைப்பாடு உடையவர். முறையாக திட்டங்களை வகுத்து செயல்படுபவர். கலைஞர் கருணாநிதியிடம் உள்ள அனைத்து திறமைகளும் அழகிரியிடம் உள்ளது. ஆனால், திமுக அழகிரியை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.

எதிர்க்கட்சிகளை வளரவிட கூடாது என்பதில் கலைஞரை போன்று செயல்படுபவர். அழகிரி எதிர்க்கட்சியாக இருந்தபோது அழகிரியால் நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம். திமுக ஆட்சியின்போது கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் என்னை விடுவித்தது. ஆனால், நான் மிரட்டப்படவில்லை.

அழகிரியை புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று. அழகிரி கட்சி துவங்கினால் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com