“காலைல அனுப்புறோம்னு சொன்னாங்க., 29 வருஷம் ஆகுது” - அற்புதம்மாள் உருக்கம்
பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29ஆம் ஆண்டு தொடங்குவதை அவரது தாயார் அற்புதம்மாள் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் ட்விட்டரில் உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதியின் துன்பத்துக்கு உதாரணமா அவன் வாழ்க்கை மாறிடிச்சு. வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துப் போகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும்.
161ல் அறிவு தந்த மனுமீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான், தீர்ப்புதந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கனும்னு கூக்குரலிடறாங்க. உண்மை குற்றவாளிய கண்டறிய போராடாம மறைந்தவர் பெயரால அருவெறுப்பான அரசியல் செய்யறாங்க. விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பை தருது. 28 ஆண்டுல சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன். சட்டம், நீதிங்கரது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கனுமா?” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.