அறுவை சிகிச்சையை பொருட்படுத்தாமல் தனது வாக்கை பதிவு செய்த முன்னாள் ராணுவ வீரர் !
82 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், அறுவை சிகிச்சை முடிந்த வெறும் இரண்டு நாட்களிலேயே தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்களது ஜனாநயக கடமையை ஆற்றினர். இந்நிலையில் 82 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், அறுவை சிகிச்சை முடிந்த வெறும் இரண்டு நாட்களிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றியது தெரியவந்துள்ளது.
82 வயதான சத்யபாலன் இந்திய ராணுவத்தில் 33 ஆண்டுகளாக பணிபுரிந்தவர். அத்துடன் ராணுவ மேஜர் ஜெனரலாகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு இவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்த நிலையில், சமீபத்தில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்த அறுவை சிகிச்சை நடந்து முடிந்த வெறும் இரண்டு நாட்களிலேயே சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று அவர் வாக்களித்துள்ளார். கடுமையான உடல்நிலையிலும் அவர் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தது, ஜனநாயகத்தின் மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கையை பறைசாற்றும்விதமாக இருக்கிறது.