அரியலூர் அருகே மின்சாரம் தாக்கியதில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்த கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூரில் பிரபல ஜவுளிகடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றியவர் மோகன். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் கேட்ரிங் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கொரோனா காலகட்டம் என்பதால் இந்த கடையில் தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த ஜவுளிகடை உரிமையாளரின் வீட்டின் மூன்றாவது தளத்தில் செட் அமைப்பதற்காக சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இதற்கு கடை ஊழியர்களை கொண்டு இரும்பு கம்பிகளை இடமாற்றம் செய்துள்ளனர்.
அப்போது மோகன் நீளமான கம்பியை தூக்கும்போது அது தெருவில் உள்ள உயர் மின் அழுத்த கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அரியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.