அரியலூர்: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
அரியலூர் அருகே 108 ஆம்புலன்ஸில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. மருத்துவ உதவியாளருக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் நல்லநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மனைவி வள்ளியம்மை (26). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக குழுமூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அரியலூர் செல்லும் வழியில் உள்ள அல்லிநகரம் அருகே சென்றபோது வள்ளியமைக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு ஆம்புலன்ஸிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும் சேயும் நலமாக உள்ள நிலையில், பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் இயேசுதாஸ், ஓட்டுநர் துரைமுருகன் ஆகியோருக்கு ரமேஷ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.