இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில், “விபத்தை குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளை சென்னை பெருநகர காவல்துறை குறைத்துவருகிறது. முக்கிய சாலைகளில் ஏற்படும் விபத்துக்களின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு தடுப்பு நடவடிக்கையாக சட்டத்தில் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது.
அபராதத் தொகை ரூ.10,000 என்பது அதிகமாக இருப்பதால், பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை; மேலும், நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபாரதம் செலுத்துவதில்லை.
அத்துடன் 10,369 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 24-ம் தேதி அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 480 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அபராதத் தொகையாக ரூ. 49,17,000 மீறுபவர்களால் செலுத்தப்பட்டன.
கடந்த 5 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 14,638 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.15,13,66,600/-அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 371 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்திக் கொள்கிறோம்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.