தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு: தேர்தல் நாளின் கவனத்துக்குரிய நிகழ்வுகள் - ஒரு தொகுப்பு

தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு: தேர்தல் நாளின் கவனத்துக்குரிய நிகழ்வுகள் - ஒரு தொகுப்பு

தமிழகத்தில் 71.79% வாக்குப்பதிவு: தேர்தல் நாளின் கவனத்துக்குரிய நிகழ்வுகள் - ஒரு தொகுப்பு

தமிழகத்தில் பெரும்பாலும் அமைதியான முறையில் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. இந்த 2021 தேர்தலில் காலை 7 மணிமுதல் மாலை 7 மணிவரை தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

தமிழக சட்டப்பேரவையில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 7 மணிக்கு நிறைவு பெற்றது. சிறு சிறு பிரச்னைகளை தவிர்த்து பெரும்பாலும் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது. வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை.

தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, தமிழகத்தை பொறுத்தவரை காலை முதல் சீரான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது. காலை 9 மணி நிலவரப்படி அதாவது வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் 13.80 சதவிகித வாக்குகள் பதிவாகின. அதுவே 11 மணிக்கு 26.29 சதவீதமாகவும், 1 ஒரு மணி அளவில் 39.61 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகியுள்ளன. 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவீதம் 53.35 என்ற அளவை எட்டியது. மாலை 5 மணி நிலவரப்படி மாநிலம் முழுவதும் 63.6 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. இறுதியில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகின.

வாக்குப்பதிவு 7 மணி வரை நீடிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான வாக்காளர்கள் மாலை 6 மணிக்கு மேல் தங்களின் வாக்கினை பதிவு செய்தனர். கொரோனா பெருந்தொற்று நீடிப்பதால் தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்தது. அதோடு, மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் தேர்தலில் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்படி வாக்குச்சாவடியில் இருந்த பூத் ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு மேல் முழு கவச உடை அணிந்து கொண்டனர்.

இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். திமுக எம்பி கனிமொழி சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் முழுகவச உடை அணிந்து சென்று வாக்களித்தார். இதேபோல பல பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டவர்களும் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

வாக்களித்த முதல்வர் வேட்பாளர்கள்:

> முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தனது தயாரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்திய பின் வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றார். தாம் போட்டியிடும் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் வாக்குச்சாவடி மையத்திற்கு குடும்பத்தினருடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர். வாக்குப்பதிவின்போது தனது பேரனையும் அவர் உடன் அழைத்துச் சென்றார்.

> திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை மெரினாவில் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பிறகு வாக்களிக்கச் சென்றார். மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.ஐ.இ.டி. வாக்குச்சாவடி மையத்தில் தனது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் சென்று தனது வாக்கினை செலுத்தினார்.

> மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினை செலுத்தினார். மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் ஆகியோரும் கமலுடன் சென்று ஜனநாயகக் கடமையாற்றினர்.

> நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளருமான சீமான், மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகர் வேளாங்கண்ணி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து அவர் தனது வாக்கினை செலுத்தினார்.

> அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட அடையாறு தாமோதரபுரம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்த அரசியல் தலைவர்கள்:

> துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் உள்ள தென்கரை செவன்ந்த் டே பள்ளி வாக்குச் சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்தார். மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெய பிரதீப், மருமகள்களுடன் சுமார் அரை மணி நேரம் வரிசையில் காந்திருந்த ஓ.பன்னீர்செல்வம், தமது வாக்கை பதிவு செய்தார்.

> திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்டம் காட்பாடியில், குடும்பத்தினருடன் சென்று தமது வாக்கை பதிவு செய்தார்.

> மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் வரிசையில் சென்று வாக்களித்தார்.

> தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியில் குடும்பத்தினருடன் ஜனநாயக கடமையாற்றினார்.

> விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் தமது ஜனநாயக கடமையாற்றினார்.

> விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தனி சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாக்களித்தார்.

> திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வாக்களிக்கச் சென்ற போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 20 நிமிட தாமதத்திற்கு பின்னர் முத்தரசன் குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

> கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது வாக்கை பதிவு செய்தார்.

> சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் சென்று சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அந்தோணியார் பள்ளியில் வாக்களித்தார்.

> மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட வளசரவாக்கம் வாக்குச்சாவடியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தரும், சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசனும் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

> கொரோனா பாதித்த நிலையில் ஜனநாயக கடமையாற்றினார் கனிமொழி எம்.பி. அவர் பிபிஇ கிட் அணிந்து வந்து வாக்களித்தார்.

> முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சிவகங்கை மாவட்டம் கண்டனூர் சிட்டாள் ஆச்சி நினைவு உயர்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

> சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில், மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.

பிரபலங்கள் வாக்களிப்பு:

> ‌‌சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில் நடிகர் அஜித்குமார் முதல் நபராக வாக்களித்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவர் வாக்களிக்கச் சென்ற போது செல்ஃபி சலசலப்புகள் ஏற்பட்டன. முழு விவரம் > ரசிகரின் செல்ஃபி தொந்தரவு; செல்போனை பிடுங்கி எச்சரித்த நடிகர் அஜித்! 

இதனிடையே, வாக்களிக்கச் சென்றபோது அஜித் அணிந்திருந்த முகக்கவசத்தின் நிறத்தை நெட்டிசன்கள் விவாதப் பொருளாக்கினர். அவர் அணிந்திருந்த கருப்பு நிற முக்கவசத்தின் நாடாக்கள் சிவப்பு நிறத்தில் இருந்ததால் அதனை கட்சிகளின் கொடி நிறத்தோடு ஒப்பிட்டு பல்வேறு தகவல்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

> நடிகர் விஜய் தமது வீட்டிலிருந்து வாக்குச்சாவடி மையத்துக்கு சைக்கிளில் சென்று வாக்களித்தது நெட்டிசன்கள் மற்றும் அரசியல் கட்சியினரிடையே பேசுபொருளானது. முழு விவரம் > 'சம்பவங்கள்' பல... விஜய் வாக்களிக்க சைக்கிளில் வந்த நிகழ்வு உணர்த்துவது என்ன? 

> நடிகர் விஜய்சேதுபதி தனது மனைவியுடன் கோடம்பாக்கத்திலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு செலுத்தினார். சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டவன் நான் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்தார். எப்போதும் மனிதம் தான் முக்கியம் என்றார்.

> ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தமது வாக்கை செலுத்தினார்.

> தியாகராயர் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில், நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோர் தங்களது வாக்கை செலுத்தினர்.

> வளசரவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சிவகார்த்திகேயன் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.

> பெசன்ட் நகர் பகுதியில் நடிகர் விக்ரம் தனது வாக்கை செலுத்தினார். அப்போது வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால், இருபது நிமிடங்கள் காத்திருந்து பின்னர் வாக்களித்தார்.

> நடிகர்கள் ஜெயம்ரவி, அர்ஜூன் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் குடும்பத்துடன் சென்று தங்களது வாக்கை செலுத்தினர்.

> இயக்குனர்கள் பாரதிராஜா, ஏ.ஆர்.முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், ஷங்கர் உள்ளிட்டோர் ஜனநாயகக் கடமையாற்றினர்.

> நடிகர் பிரபு தமது குடும்பத்துடன் சென்று தியாகராயர் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

> நடிகர்கள் பிரசன்னா, சினேகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், ஆர்யா, உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.

> நடிகர் அருண் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தனர்

> நடிகர் சிம்பு, நடிகை நிக்கி கல்ராணி ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

தேர்தல் நாள் சலசலப்புகள்:

> கோவை தெற்கு தொகுதியில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும், டோக்கன் தரப்படுவதாகவும் மக்கள் நீதி மய்யம் தலைவரும், கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் குற்றம்சாட்டினார். சென்னையில் வாக்களித்த பின், கோவை தெற்குத்தொகுதிக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.

> கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்கள் தாக்க முற்பட்டதாக திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதிமுக - பாஜகவினர் சிவசேனாபதியை தாக்க முற்பட்ட வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை பார்வையிட்டுள்ளார். வாக்குச் சவாடி எண் 127-யை அவர் பார்வையிட்டு திரும்பும்போது, அங்கிருந்த அதிமுக மற்றும் பாஜகவினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின், கார்த்திகேய சிவசேனாபதியை பாதுகாப்பாக காரில் ஏற்றினார். ஆனால், அவரது காரை வழிமறித்த அதிமுக மற்றும் பாஜகவினர் காரின் கண்ணாடியை உடைக்க முயன்றனர்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து திமுகவினர் பேரணியாக நடந்து சென்று செல்வபுரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலையச் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன், வடவள்ளி சந்திரசேகர் உள்ளிட்டோர் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தாக்க முற்பட்டதாகவும் அவர் புகார் கூறியுள்ளார். முன்னதாக தேர்தல் விதி மீறி நேற்றிரவு எஸ்.பி.வேலுமணி தரப்பினர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு எதிராக துண்டு பிரசுரங்களை விநியோகித்தது குறித்து புகார் அளிக்கப்பட்டது.

> சென்னை துறைமுகம் தொகுதி ஏழுகிணறு பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மீரான் லெப்பை தெரு பகுதியைச் சேர்ந்த மக்கள், கடந்த மக்களவைத் தேர்தல் வரை வாக்களித்துள்ளனர். ஆனால், தற்போது அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், வாக்களிக்க முடியவில்லை. தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் புகார் அளித்தும் பயன் ஏதும் இல்லை என லெப்பை தெரு மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

> திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதியில், அதிமுக திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், போலீஸார் லேசான தடியடி நடத்தினர். ஈகுவார்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு 100 மீட்டர் முன்பாக அதிமுக மற்றும் திமுக கட்சியினர் வாக்கு சேகரித்து கொண்டிருந்த போது இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டி அடித்தனர்.

> திருச்சியில், நாடாளுமன்ற தேர்தலின்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது வெளியே தெரிந்ததால் பிற கட்சியினர் தங்களுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என கேட்பதாக பார்வை மாற்றுத்திறனாளிகள் புகார் தெரிவித்தனர். திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயர்லெஸ் சாலைப் பகுதியில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் போராட்டம் நடத்தினர். அப்போது, தங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய அதிகாரிகள் ஆவணங்கள் அளிக்கவில்லை என்றும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்த பிற கட்சியினர் தங்களிடம் வந்து கேட்பதாகவும் புகார் கூறினர். இதனையடுத்து தேர்தல் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

வாக்குப்பதிவு பாதிப்பு...

> சென்னையில் உள்ள மந்தைவெளி, பெசன்ட் நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் பழுதை சரி செய்த பின் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சூரப்பூண்டி, காயலார்மேடு ஆகிய இரு வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. இதே போல, ஆத்தூர், பெரவள்ளூர் கிராமத்திலும் வாக்கு இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு தாமதமானது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மனப்பாடி, மேட்டு காலிங்கராயநல்லூர், கீழ பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு ஆனதால் இரண்டு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்தவர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் ரகுபதி வாக்களிக்க வந்த போது, வாக்கு இயந்திரம் பழுதானது. இதனால் ஒரு மணி நேரம் காத்திருந்த அவர், இயந்திரத்தை சரிசெய்தவுடன் வாக்களித்தார்.

உயிரிழப்புகள் / காயம்...

> கும்பகோணம் அருகே 55 வயது முதியவர் வாக்களித்துவிட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அய்யம்பேட்டை ஆற்றங்கரை வடம்பொக்கி தெருவை சேர்ந்த 55 வயதான அர்ச்சுனன் நெசவு கூலித் தொழிலாளி. இவர் அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் மெட்ரிக் பள்ளியில் வாக்களித்து விட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் குறைந்ததே இறப்புக்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

> திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, திருவேகம்பத்தூரை சேர்ந்த 40 வயதான ரஜினிகாந்த் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரையூர் வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலராக பணி ஒதுக்கப்பட்டது. நேற்றில் இருந்தே இவர் இங்கு பணியாற்றி வந்த நிலையில் இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் பணியாற்றியவர்கள் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

> மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், வாக்களிப்பதற்காகச் சென்றவர்களின் வேனும், லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக வேனில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அல்லிகுண்டம் அருகே அட்டை ஏற்றி வந்த கனரக லாரி, வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வாக்களிக்கச் சென்ற மூவர் உயிரிழந்தனர். மேலும் வேனில் பயணித்த ஏழு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக, லாரியில் பற்றிய தீயை தீயணைப்புத்துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

> திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தேர்தல் அதிகாரி குளிக்கச் சென்ற போது வழுக்கி விழுந்து உயிரிழந்த சோகம் நேர்ந்துள்ளது.
பழனியை சேர்ந்த 55 வயதான சம்மந்தம், நத்தம் அருகே கோசுக் குறுச்சியில் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனையொட்டி கோசுக்குறிச்சிக்கு அவர் வருகை தந்திருந்தார். இன்று காலை குளிக்க சென்ற போது பாத்ரூம்மில் வழுக்கி விழுந்து பின் தலையில் அடிபட்டது. பின்னர் அவர் கோசுக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

> ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வாக்குச்சாவடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர். கண்டிலான் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அப்பகுதி மக்கள் வாக்களிப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கிருந்த ஐந்து பேர் காயமடைந்ததனர். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com