தொழில் தீர்பாயத்திற்கு தமிழ் தெரிந்த நீதிபதிகளை நியமிக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன்

தொழில் தீர்பாயத்திற்கு தமிழ் தெரிந்த நீதிபதிகளை நியமிக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன்
தொழில் தீர்பாயத்திற்கு தமிழ் தெரிந்த நீதிபதிகளை நியமிக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன்

தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமித்திடக்கோரி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் நேரில் வலியுறுத்தினார்.

பணி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை பிரத்யேகமாக முன்னெடுக்கவும், தீர்க்கவும் லேபர் கோர்ட்டுகள் அல்லது மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயங்கள் (Central Government Industrial Tribunal) அமைக்கப்பட்டு இருக்கின்றன.

அப்படி சென்னையில் சாஸ்திரி பவனில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு நீக்குவது, பழி வாங்கும் விதமாக தொழிலாளர்களை தண்டிப்பது, தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய சலுகைகளை மறுப்பது, கூட்டு பேர உரிமையை மறுப்பது என தொழிற் தகராறு சட்டத்தின் படி எழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விசாரித்து தீர்ப்புகள் வழங்குவதற்கு மொத்த தமிழ்நாட்டிற்கும் அது ஒரே இடம் தான்.


அணி திரட்டப்பட்ட, அணி திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களின் தாவாக்களை (Dispute) தீர்ப்பதற்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் இடம் அது ஒன்று மட்டும்தான். எந்தவொரு தொழில் தாவாவும் (Industrial Dispute) மூன்று மாதத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் 2003-ஆம் ஆண்டில் இருந்து தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தாவாக்களையும் கொண்டதாக சென்னை தீர்ப்பாயம் இருக்கிறது.

இந்த ஆக்கத்தில், வருங்கால வைப்பு நிதி (provident Fund) குறித்த தாவாக்களையும் இந்த தீர்ப்பாயத்தோடு இணைத்து 2017ஆம் ஆண்டில் உத்தரவிட்டது மத்திய அரசு. இதில் கொடுமை என்னவென்றால் 2017-ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டு வரை இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிபதி நியமிக்கப்படவில்லை. 2018-ஆம் ஆண்டில் ஒரிஸாவைச் சேர்ந்த மாண்புமிகு திப்தி மல்ஹோத்ரா அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்படார். ஆனாலும் தாவாக்கள் முறையாகவும், முழுமையாகவும் நடத்தப்படவே இல்லை. வழக்குகள் எல்லாம் மேலும் தேங்கின. கொரோனா வந்த பிறகு எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்களை வைத்துதான் வழக்கு நடத்த வேண்டுமென்றில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களே தங்களுக்காக வழக்கு நடத்தலாம். அல்லது தொழிற்சங்கத் தலைவர்களே வழக்கு நடத்தலாம். அப்படியானால் தீர்ப்பாயத்தில் புழங்கும் மொழி அந்தந்த மாநிலத்தின் மொழியாக இருக்க வேண்டியது அவசியம். வேறு மாநிலத்து நீதிபதிகளை நியமித்தால் எப்படி எளிய, சாதாரண தொழிலாளர்கள் தங்களுக்காக வாதிட முடியும். அதனால் முன்னெடுக்க முடியாத, சரியான தீர்ப்பு கிடைக்காத தீர்ப்புகளும் இருக்கின்றன.

ஆகையால் உடனடியாக தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை, சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமிக்க வேண்டியதும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தி தீர்க்க வேண்டியதும் அவசியம். இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளதாகவும், சென்னை தீர்ப்பாயத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளதாகவும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com