சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் 9 மாணவர் விடுதிகள் மற்றும் ஒரு விருந்தினர் மாளிகை இயங்கி வருகிறது. அங்கு 66 மாணவர்கள், 5 ஊழியர்கள் என 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் விடுதியில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், “சென்னை ஐஐடியில் மேலும், 33 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்து பாதிப்பு 104 ஆக உயர்ந்துள்ளது. ஐஐடியை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும். கேண்டீனில் தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும். நானும் சுகாதாரத்துறை அமைச்சரும் ஐஐடியை பார்வையிட உள்ளோம். யாரும் அச்சப்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.