“காழ்ப்புணர்ச்சியுடன் தவறான தகவல்களை பரப்புகிறார் அண்ணாமலை”- அமைச்சர் செந்தில் பாலாஜி

“காழ்ப்புணர்ச்சியுடன் தவறான தகவல்களை பரப்புகிறார் அண்ணாமலை”- அமைச்சர் செந்தில் பாலாஜி
“காழ்ப்புணர்ச்சியுடன் தவறான தகவல்களை பரப்புகிறார் அண்ணாமலை”- அமைச்சர் செந்தில் பாலாஜி

“மொத்த மின் தேவையில், வெறும் 1.04% மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது” என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.

“திமுகவை சேர்ந்த ஒருவர், தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து 4000 கோடி முதல் 5000 கோடி வரையில் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஒருவேளை வரும் காலத்தில் அப்படியேதும் செய்யப்பட்டால் இந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவோம்” என்று தமிழக மின்துறை அமைச்சர் மற்றும் மின்துறை அதிகாரிகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சென்னை அண்ணாசாலையில் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியிருந்தார்.

அப்போது பேசுகையில், “பொத்தம் பொதுவாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியுடன் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். ஒரு கட்சியின் தலைமையில் இருப்பவர் சரியாக விசாரிக்காமல் அவதூறு செய்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும். தன் இருப்பைக் காட்டிக்கொள்ள இவ்வாறான அவதூறை பரப்புவது பக்குவமற்ற நிலையை காட்டுகிறது. மிரட்டும் தொனியில் பேசுவது மக்களுக்கு அவர்கள் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது” என்று அமைச்சர் கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியவை: “4,320 மெகாவாட் நிறுவுத்திறன் நம் மாநில மின்வாரியத்துக்கு உள்ளது. அதில் கடந்த ஆட்சியின்போது 1,800 மெகாவாட்தான் உற்பத்தி நடந்திருந்தது. பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட காரணங்களினால் கடந்த ஆட்சியில் உற்பத்தியானது, அதன் நிறுவுத்திறனை விடவும் குறைக்கப்பட்டிருந்தது. குறைக்கப்பட்ட உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் மாநிலத்தின் தேவையை மாநிலமே நிறைவாக செய்துகொள்ள வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களிடம் உத்தரவிட்டு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியிருந்தார்.

முதல்வரின் உத்தரவின்படி, தற்போது 3,500 மெகா வாட் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 900 மெகா வாட் அளவு மின்சாரம் தனியார் நிறுவனங்கள் மாநில அரசுக்கு தருகின்றன. 4,000 மெகா வாட் தருவதாக தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்களால் முழுவதுமாக அதை செய்ய முடியவில்லை. இந்த இடைவெளியை குறைக்க, இந்திய மின் சந்தை வழியாக தற்போது நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

தினந்தோறும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இந்திய மின் சந்தையில் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்யப்படும். அதன்படி தமிழகத்தின் சராசரி தேவையான 320 மில்லியன் யூனிட் பெறப்படுகிறது. இதில் 24.09.2021 முதல் 19.10.2021 வரையிலான காலகட்டத்தில் இந்திய மின் சந்தையில் நாம் மொத்தமே கொள்முதல் செய்தது, 397 மில்லியன் யூனிட் மட்டுமே. பெறப்பட்ட இந்த 397 மில்லியன் யூனிட்-ம் கூட, ரூ.20 க்கு கொள்முதல் செய்யப்பட்டது, 65 மில்லியன் யூனிட் மட்டுமே.. அதாவது, கொள்முதல் செய்யப்பட்டவற்றிலேயேவும், வெறும் 1.04% மட்டும்தான் அதிக விலையில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.

இதுவே குஜராத், ஆந்திரா (இவை இரண்டு மாநிலங்களும் நம்மை போலவே சராசரி தேவை கொண்ட மாநிலங்களாக உள்ளன. குஜராத் ஒரு நாள் தேவை - 320 மில்லியன் யூனிட்; ஆந்திரா ஒரு நாள் தேவை - 216 மில்லியன் யூனிட்) ஆகிய மாநிலங்களில் ரூ.20க்கு 131 மில்லியன் யூனிட்; ரூ.20 க்கு 52 மில்லியன் யூனிட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு வெறும் 1.04% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்பது மிக மிக குறைவும்தான். இதுவும்கூட நிலக்கரி தட்டுப்பாட்டால்தான் அங்கு போய் கொள்முதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்றபடி தமிழ்நாடு மின்துறை மிகச்சிறப்பாகவே செயல்படுகிறது.

இவற்றையெல்லாம் அறியாமல் பாஜக தலைவர் அண்ணாமலை, நம் மாநில அரசு 4 மடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். ஒரு கட்சியின் தலைவர், நான் மேற்குறிப்பிட்ட தகவல்களையெல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டு பேச வேண்டும். குறிப்பாக நம் மாநிலத்தில் எங்கிருந்து மின்சாரம் வாங்குகிறோம், எவ்வளவு வாங்கியுள்ளோம், பிற மாநிலங்களில் எவ்வளவு வாங்கியுள்ளார்கள், இங்கு நிலைமை எவ்வளவு கட்டுக்குள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்துவைத்து பேச வேண்டும்.

தமிழ்நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டால், இதுவரை ஒரே ஒரு மணி நேரம்கூட அனல்மின் நிலையம் எதுவும் தனது செயல்பாட்டை நிறுத்தவில்லை. அந்தளவுக்கு துரிதமாகவும் திட்டமிடுதலுடனும் செயல்படுகிறது தமிழக அரசு. நாங்கள் வாங்கியுள்ள 1.04% கூடுதல் மின்சாரமும்கூட, மத்திய அரசு இந்திய மின் சந்தையில் வாங்கியதுதான். இந்த அளவும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிக மிக குறைவுதான். இப்போதைக்கு நிலக்கரி தட்டுப்பாடு மட்டுமே தமிழகத்தில் நிலவி வருகிறது. இந்த விவரம் எதுவுமே தெரியாமல், நடைமுறை தெரியாமல் இந்த ஆட்சி மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் பாஜக சார்பில் அண்ணாமலை பேசியுள்ளார்.

கடந்த ஆட்சியை போல இந்த ஆட்சியில் சீர்கேடு நடந்துவிடக்கூடாது, எவ்வித முறைகேடும் நடக்கக்கூடாது என நினைத்து நாங்கள் மிக மிக கவனமாக இருந்து வருகிறோம். அப்படியிருக்கையில் இப்படி அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பேசுவதை ஏற்கமுடியாது.

பருவமழை காலத்தை எதிர்கொள்ளும் வகையில் மின்வாரியம் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வரின் அறிவுறுத்தலின் பெயரில் வாரியம் சில முன்னேற்பாடுகள் செய்துள்ளன. வரக்கூடிய பருவமழை காலத்தில் சீரான தடுப்பில்லாத மின்சாரம் விநியோகம் செய்ய ஆலோசனை கூட்டம் நடைபெற்று பல்வேறு முடிவு எடுக்கப்பட்டுள்ளன. 93 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com