நாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ

நாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ
நாடகமாடி தமிழகர்களை கைது செய்த ஆந்திர போலீஸ் - அம்பலப்படுத்திய வீடியோ

செம்மரக் கடத்தல்காரர்களை சுற்றிவளைத்து பிடிப்பது போல ஆந்திர செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் நாடகமாடி சிலரை கைது செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆந்திர வனப்பகுதியில் அதிகம் விளையும் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. நல்லவிலைக்கு போவதால் செம்மரங்களை வெட்டிக்கடத்துவதாக கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. செம்மரக்கடத்தலை தடுக்க, செம்மரக்கடத்தல் பிரிவு ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் மற்றும் ஆந்திராவைச்சேர்ந்த ஒருவர் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அவர்களை முன்கூட்டியே மடக்கிப்பிடித்த போலீசார், துப்பாக்கி முனையில் அவர்களை ஆட்டோநகரில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைத்தனர். பின்னர் வாகனத்தில் சென்று அவர்களை பிடிக்கச்செல்வது போல சேசிங் செய்யும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து 15க்கும் அதிகமான செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவினர் வீட்டின் மற்றொரு வழியாக மோப்ப நாயுடன் சென்று புதிதாக அந்த வீட்டை சுற்றி வளைப்பது போலவும், அங்கு பதுங்கியிருந்தவர்களை பிடிப்பது போலவும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிடிபட்டவர்களிடம் சோதனை நடத்துவது போல காட்சிகள் எடுத்து, அவர்களை செம்மரக் கடத்தல்காரர்களாக சித்தரித்து ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செம்மரம் கடத்தியதாக இதுவரை 33 தமிழர்கள், ஆந்திர காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இதுபோன்ற கைது நாடகம் எதற்காக? ஏன் இதுபோன்ற காட்சிகளை எடுத்து செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் வெளியிடுகிறார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. செம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்கிறோம் என்ற பெயரில் நடக்கும் இதுபோன்ற மனித உரிமை மீறல்களை தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com