கீழே கிடந்த 16 கிராம் தங்கச் சங்கிலியை மீட்டுக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் ஒருவருக்குக் காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பரிசு வழங்கியுள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் கடந்த வாரம் வின்சென்ட் (82) என்பவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது 16 கிராம் தங்கச் சங்கிலி ஒன்றைக் கண்டதாகத் தெரிகிறது. இதனையடுத்து தங்கச் சங்கிலியைக் கைப்பற்றிய வின்சென்ட் அதனைப் பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக விசாரணையைத் துவக்கிய குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி, அங்கு பணிபுரியும் காவலாளிகளிடம் யாரேனும் தனது பொருட்களைக் காணவில்லை எனத் தேடி வந்தார்களா? என விசாரணை நடத்தினார். விசாரணையில் நெல்லை ஜங்சன் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தங்கச் சங்கிலியைத் தவற விட்டது தெரியவந்தது.
இதனையடுத்து உரிய விசாரணை நடத்தப்பட்டு அவரிடம் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது. இப்படி நெருக்கடியான காலகட்டத்திலும் கூட மிக நேர்மையாக நடந்து கொண்ட வின்சென்டைப் பாராட்டிக் காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் பரிசு வழங்கி பாராட்டியதோடு முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார்.