விழுப்புரம் அருகே 4 ம் வகுப்பு மாணவன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.அதே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் படுகாயத்துடன் புதுச்சேரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள வெளம்புத்தூர் கிராமத்தில் வசிப்பவர் ஆராயி. இவரது கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆராயிக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இதில் கடைசி மகள் தனம் மற்றும் மகன் தமயனுடன் ஆராயி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை ஆராயின் மகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார் அருகில் ஆராயியும் அவரது மகள் தனமும் படுகாயத்துடன் கிடந்துள்ளனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த ஆராயி மற்றும் அவரது மகளை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமணையில் அனுமதித்தனர். இறந்துப் போன தமயனின் உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.