வாணியம்பாடியில் கொரோனாவை கட்டுப்படுத்த ஓவியர் எடுத்திருக்கும் சிறிய முயற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
திருப்பதூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள வளையம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பீம்ராஜ் (55). இவர், கடந்த 35 ஆண்டுகளாக ஓவியர் பணி செய்து வருகிறார். ஊரடங்கு காலமான இப்போது முற்றிலும் வேலை இல்லாத நிலையில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுவற்றில் வண்ணம் தீட்டுதல் போன்ற பணிகளை செய்து வந்தார்.
இந்நிலையில், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் வைத்திருக்கும் இருசக்கர வாகனத்தில் ஆம்பிளிபயர் மற்றும் 2 வாலி வடிவிலுள்ள ஹாரன்களை எடுத்துக் கொண்டு காலை 6 மணிக்கு செல்லும் இவர், கிராமம் கிராமமாக சென்று மின்கம்பத்தில் ஹாரன்களை கட்டி அதில் அரசு மற்றும் அவர் ரெக்கார்டிங் செய்து வைத்துள்ள விழிப்புணர்வு ஆடியோ மற்றும் விழிப்புணர்வு பாடல்களை ஒலிக்கச் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இதற்காக இவர், 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சொந்தமாக ஆம்பிளிபயர் மற்றும் ஹாரன்களை வாங்கியுள்ளார். இவர் போன்றவர்களை அரசு ஊக்குவித்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தால் மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஏதுவாக இருக்கும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.