சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என அறிவிப்பு
சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் யுத்தத்தில் அடுத்த 3 முதல் 4 வாரங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் நாளை காலை 7 மணி முதல் இரவு மணி 9 வரை தானாக முன்வந்து, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து, பொதுமக்கள் நாளை தாமாகவே முன்வந்து ஊரடங்கு நிலையை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அன்றைய தினம் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடாது என்று அறிவித்துள்ளார். சுய ஊரடங்கையொட்டி தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நாளை வழக்கம்போல் அம்மா உணவகங்கள் செயல்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும் பொதுமக்கள் நலன் கருதி அம்மா உணவகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.