செய்தியாளர்: ஆர்.இமானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் ரபீக் நகரை சேர்ந்த அசீம் (21) மற்றும் ஹாமீத் (22) நண்பர்களான இருவரும் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தில் இன்று வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மின்னூர் சிப்காட் பகுதியில் அதிவேகமாக இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரண்டு இளைஞர்களும் தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.