ஆம்புலன்ஸ் வராமல் துடிதுடித்த அஷ்வினி... நல்லபெயர் எடுத்துக்கொண்ட போலீஸ்..!

ஆம்புலன்ஸ் வராமல் துடிதுடித்த அஷ்வினி... நல்லபெயர் எடுத்துக்கொண்ட போலீஸ்..!
ஆம்புலன்ஸ் வராமல் துடிதுடித்த அஷ்வினி... நல்லபெயர் எடுத்துக்கொண்ட போலீஸ்..!

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஆம்புலன்ஸ் தாமதாக வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை கே.கே.நகரில் தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்துவந்த மாணவி அஷ்வினி. மாணவி இன்றைய வகுப்புகள் முடிந்து வீடு திரும்ப கல்லூரி வாசலுக்கு வந்தபோது அஷ்வினியை இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியை பொதுமக்கள் மீட்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனிடையே, கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, “ கல்லூரி முடிந்து அஷ்வினி வெளியே வந்தபோது, திடீரென அவரை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் ஒருவர், அவருடன் வாக்குவாதத்தில்‌ ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், தான் மறைத்து கொண்டுவந்த கத்தியை எடுத்து அஷ்வினியின் கழுத்தில் சரமாரியாக அறுத்தார். இதனால் ரத்த வெள்ளத்தில் அஷ்வினி சரிந்து விழுந்தார். நாங்கள் ஓடிப்போய் அஷ்வினியை காப்பாற்ற முயற்சித்தோம். உடடினயாக ஆம்புலன்ஸை அழைத்தோம். ஒருவர் மட்டுமல்ல.. பலரும் ஒவ்வொரு மொபைலில் இருந்து ஆம்புலன்ஸை தொடர்புகொண்டோம். எப்படியாவது அஷ்வினியை காப்பாற்றிவிட வேண்டும் என எண்ணினோம். ஆனால் ஆம்புலன்ஸ் வரவே இல்லை. உடனே நாங்களே ஒரு வண்டியின் மூலம் அஷ்வினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். சரியான நேரத்திற்கு அதாவது ஒரு 10 நிமிடத்திற்கு முன்னதாக ஆம்புலன்ஸ் வந்தால் அஷ்வினியை காப்பாற்றியிருக்கலாம். ஆம்புலன்ஸ் தாமதாக வந்ததால் அஷ்வினியின் உயிர் துடிக்கதுடிக்க இறந்தார்” என வேதனையுடன் கூறினார்.

சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் நம்முடன் இதுபற்றி கூறும்போது, “அஷ்வினியை கழுத்து அறுத்து கொலை செய்த இளைஞரை பொதுமக்களும், இளைஞர் ஒன்றாக சேர்ந்து மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தோம். சம்பவம் நடக்கும்போது அப்பகுதியில் ஒரு போலீஸ் கூட இல்லை. எல்லாம் முடிந்துபோன பின் தாமதமாக வந்த போலீசார் உயர் அதிகாரிகளிடம் போனில் பேசும்போது, ‘குற்றவாளியை பிடிச்சாச்சு சார்’ என ஈஸியாக பேசுகிறார். குற்றவாளியை மடக்கி பிடித்து என்னவோ பொதுமக்களும், இளைஞர்களும்தான். ஆனால் பெயரை மட்டும் போலீஸ்காரர்கள் எடுத்துக்கொண்டனர்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே குத்திக்கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஷ்வினியின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com