விருப்பப்படி வாழ அனுமதிக்க வேண்டும்: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தவர் பேட்டி

விருப்பப்படி வாழ அனுமதிக்க வேண்டும்: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தவர் பேட்டி
விருப்பப்படி வாழ அனுமதிக்க வேண்டும்: மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்தவர் பேட்டி

அவரவர் விரும்பும்படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தனிமனித உரிமை மீறல் நடைபெறக் கூடாது என்றும் தேனியில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த கணவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தேனி அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் - மகாலட்சுமி தம்பதியினர். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். பொறியியல் பட்டதாரியான கண்ணன் ஒப்பந்த வேலை செய்து வருகிறார். கண்ணன் மற்றும் மகாலட்சுமியும் இயற்கை மருத்துவம் முறையில் (சுகபிரசவம்) ஆர்வம் கொண்டுள்ளனர்.

இதனிடையே நிறைமாத கர்ப்பிணியான மகாலட்சுமிக்கு மருத்துவர் தேதி குறித்து கொடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து கண்ணன் தன் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். நேற்று காலை 5 மணியளவில் அவருக்கு அழகான ஆண்  குழந்தை பிறந்தது. ஆனால் பிரசவம் முடிந்து குழந்தையின் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி மருத்துவத் துறைக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதனால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவக் குழுவினர் அங்கு சென்றனர். ஆனால் கணவன், மனைவி இருவரும் நச்சுக் கொடியை அகற்ற மருத்துவக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவ குழுவினர் அவர்களது வீட்டின் அருகிலேயே நாள் முழுவதும் காத்திருந்தனர். பின்பு மருத்துவகுழு, அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பேசியுள்ள கண்ணன், “ குழந்தை பிறந்த உடன் நேற்று மருத்துவக் குழுவினர் மற்றும் போலீசார் உடனடியாக என்னுடைய மனைவி மற்றும் குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க சொன்னார்கள். என் மனைவி அதனை விரும்பாத காரணத்தினால் நான் அதனை மறுத்துவிட்டேன். நேற்று முழுவதும் மருத்துவக் குழு என் மனைவி மற்றும் குழந்தையின் உடல்நிலையை கண்காணித்தனர்” என தெரிவித்தார்.

மேலும் பேசிய கண்ணன், அவரவர் விரும்பும்படி வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தனிமனித உரிமை மீறல் நடைபெறக் கூடாது என்றும் கூறினார். இயற்கை முறையில் பழங்காலம் தொட்டு பார்த்து வரப்பட்ட பிரசவ முறைகளை நன்கு தெரிந்த பின்பே, வீட்டிலேயே பிரசவம் பார்க்க தனது மனைவியும் குடும்பத்தாரும் முடிவு செய்ததாகவும் கூறிய கண்ணன், பிரசவத்துக்கு பின் தனது மனைவியும் குழந்தையும் நலமுடனேயே உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com