திமுக - காங்கிரஸ் இன்று கூட்டணி பேச்சு.. முடிவுக்கு வருமா கூட்டணி சிக்கல்?
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது. காங்கிரஸ் 39 தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்களை கோரும் நிலையில், திமுக 25 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் வழங்க விரும்புகிறது. கூட்டணி சிக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுகவுடன் காங்கிரஸ் பிரதிநிதிகள் இன்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர்.
கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த முறை 39 தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை இடங்களை காங்கிரஸ் கோரி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், காங்கிரஸுக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளுடன், ஒரு மாநிலங்களவை சீட் மட்டுமே தர திமுக தலைமை விரும்புவதாகத் தெரிகிறது.
இன்று கூட்டணி பேச்சுவார்த்தை..
இந்நிலையில், திமுக -காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் மறைமுகத் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில், கூட்டணி இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திருச்சியில் வரும் 9ஆம் தேதி நடைபெறும் திமுக மாநாட்டில், கூட்டணி கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் நிறுத்தவும் திமுக திட்டமிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவதற்கான அத்தனை வியூகங்களையும் திமுக வகுத்துவரும் நிலையில், காங்கிரஸ் இடையேயான உரசலை முக ஸ்டாலின் இன்று முடிவுக்கு கொண்டுவருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

