சேலம் | பணி நேரத்தில் மது போதையில் இருந்த முதல்நிலை சிறை காவலர் சஸ்பெண்ட்
செய்தியாளர்: மோகன்ராஜ்
ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த சிறையில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் தளவாடப் பொருட்களை பாதுகாப்பதற்காக சுழற்சி முறையில் காவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் பணி முடிக்கும் நேரத்தில் பொருட்கள் பட்டியல் குறித்த கணக்கை கொடுக்க வேண்டும்.
இந்நிலையில், நேற்று பணியில் ஈடுபட்டிருந்த முதல் நிலை காவலர் தனபால், கணக்கு கொடுக்க வந்தபோது நிதானமின்றி உளறியதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பணி நேரத்தில் மது போதையில் இருந்த காரணத்தினால் முதல் நிலை காவலர் தனபாலை பணியிடை நீக்கம் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் உத்தரவிட்டார்.