மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை... மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை... மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை... மத்திய அரசிடம் அறிக்கை கேட்கும் நீதிமன்றம்

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரையை சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டியது. ஆனால் மருத்துவமனை கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறவில்லை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தென்தமிழகம் மற்றும் கேரளா மாநில மக்கள் பெரும் பயன் அடைவார்கள். மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் மாணவர்களுக்கு கூடுதல் ஒதுக்கீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் தற்போது கொரோனா தொற்று காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்காக அளவுக்கு அதிகமாக பணம் வசூல் செய்யும் சூழலில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திருந்தால் ஒரே நேரத்தில் பலஆயிரம் மக்கள் சிகிச்சை பெற்று பயன் பெற்றிருப்பார்கள். ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை. ஆகவே, மதுரை தோப்பூரில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நிதியை ஒதுக்கி, பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் தமிழகத்தோடு சேர்த்து அறிவிப்பு வெளியான பிற மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com