”விஜயின் அரசியல் ஒரு இன்குபேட்டர் குழந்தை” - வைகைச்செல்வன் விமர்சனம்
”தவெக தலைவர் விஜயின் அரசியல், ஒரு இன்குபேட்டர் குழந்தையை போன்றது” என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் திமுக அரசுக்கு எதிராக திண்ணை பிரசாரக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய வைகைச்செல்வன், விஜயின் அரசியல் மற்றும் பரப்புரைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “விஜய்யின் பிரசாரங்கள் திட்டமிடப்படாத பிரசாரமாகத் தெரிகின்றன. அவர் ஒரு ‘இன்குபேட்டர் குழந்தை’ போல முழுமையாக வளர்ச்சி அடையாத தலைவர்” என்றார்.
மேலும் அவர், திண்டுக்கல்லில் நயன்தாராவைப் பார்ப்பதற்காக 60,000 பேர் திரண்டதையும், சேலத்தில் கடை திறப்பு விழாவுக்காக அறுபதாயிரம் பேர் கூடியதையும் சுட்டிக்காட்டினார். 2011 தேர்தலில் வடிவேலுக்குக் கூடிய கூட்டத்தையும் குறிப்பிட்டார். நடிகர்களைப் பார்ப்பதற்காக மக்கள் கூடுவார்கள். ஆனால், அவர்கள் எப்படிப் பேசுகிறார்கள் என்றுதான் கவனிப்பார்கள். கொள்கை, லட்சியம், சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் இயங்குபவர்களுக்குதான் மக்கள் வாய்ப்பு வழங்குவார்கள் என்று வைகைச்செல்வன் தெரிவித்தார்.