அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காதது தேமுதிகவிற்கு சாதகம் - சுதீஷ்

அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காதது தேமுதிகவிற்கு சாதகம் - சுதீஷ்
அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காதது தேமுதிகவிற்கு சாதகம் - சுதீஷ்

இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியினர் பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்துவார்கள் என தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ், ஜெயலலிதா அவர்கள் முரசு, தேமுதிக இல்லாமல் போகும் என தெரிவித்தார். ஆனால், தற்போது இரட்டை இலை சின்னம் இல்லை என்றார்.

கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் 10.3 சதவீத வாக்குகள் பெற்று இந்தியவையே திரும்பிப் பார்க்க வைத்தோம். அதனால் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கேப்டன் வீட்டிற்கு வந்தார்கள். அதேபோல ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வைத்தால் 2024-ல் டெல்லியில் உள்ள பாஜக, காங்கிரஸ் கட்சியினர் கேப்டனை சந்திக்க வருவார்கள்.

நம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டிய நேரம் இது. விலகி இருக்கும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுங்கள் வாக்குகள் இரட்டிப்பாகும். காலை மாலை என மூன்று, மூன்று மணி நேரம் பிரச்சாரம் செய்ய வேண்டும் மீதமுள்ள நேரத்தில் பழைய கட்சி நிர்வாகிகளை மீண்டும் கட்சிக்கு அழைத்து வரவேண்டும். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்... 10 தேதி முதல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த உள்ளோம். அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காதது தேமுதிகவிற்கு சாதகமாக அமையும்.இந்த தேர்தலில் வியூகம் என்று எதுவும் இல்லை. வேட்பாளருக்கு மக்கள் பிரச்னைகள் அனைத்தும் தெரியும். அவர், சென்னைவாசி கிடையாது.

திராவிட மாடலா என மக்கள்தான் சொல்லவேண்டும். ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியது, மின்கட்டணம் உயர்வு இவற்றின் விளைவு இடைத் தேர்தலில் தெரியும். தேர்தலில் மக்கள் ஆளுங்கட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் தான் கண்காணிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் உள்ள திமுக அதிமுக கட்சி கொடிகளை அகற்ற வேண்டும். திமுகவிடம் ஆட்சி அதிகாரம் பணபலம் இருப்பதால் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி பணபலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்துவார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com