"அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டு விட்டது... ஏறுபவர்கள் ஏறலாம்!" - செல்லூர் ராஜூ பேச்சு

"அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டு விட்டது... ஏறுபவர்கள் ஏறலாம்!" - செல்லூர் ராஜூ பேச்சு
"அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டு விட்டது... ஏறுபவர்கள் ஏறலாம்!" - செல்லூர் ராஜூ பேச்சு

அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டு விட்டது. கூட்டணியை நம்பி வந்தால் ஏற்றிக்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை மேற்குத் தொகுதிக்குட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் நிலையூர் கால்வாய் குறுக்கே பழுதடைந்து பாலத்தை 45.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தும், 7 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்த கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். தொடர்ந்து தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் அருகே 17.39 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது மனைவி ஜெயந்தியுடன் பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகளிடம் நீர்த்திறப்பு குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ''கூட்டுறவுத்துறை வருமானத்தில் நிதியமைச்சருக்கு திருப்தி இல்லை. மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறையை வளமான துறையாக மாற்றினோம். தவறுசெய்தால் உடனடி நடவடிக்கை எடுத்தோம். எங்கள் ஆட்சியில் 27 விருதுகளை கூட்டுறவுத்துறைக்கு பெற்றோம்” என்றார். 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டபோது, “அது ஆய்வுக்கு உட்பட்டது. அரசு மேல்முறையிடு செய்துள்ளது. எதுவாக இருந்தாலும் எதிர்காலத்தில் தான் தெரியும்'' என்றார்.

அதிமுகவின் மெகா கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, “அதிமுக எக்ஸ்பிரஸ் டெல்லி புறப்பட்டுவிட்டது. எக்ஸ்பிரஸில் ஏறுபவர்கள் ஏறலாம். ஏறுபவர்கள் டெல்லி போகலாம். ஏறாதவர்கள் இங்கேயே இருக்கலாம். அதிமுக தலைமையில் தான் இம்முறையும் கூட்டணி அமையும். கூட்டணிக்கு நம்பி வந்தால் ஏற்றிக்கொள்வோம். அதிமுக தான் என்றுமே தலைமை. இது இன்றல்ல, நேற்றல்ல... இது தான் வரலாறாக உள்ளது. எங்களை நம்பி வந்தால் கை தூக்கி விடுவோம்.

எங்களை நம்பி வந்தால் தூக்கி சுமந்து செல்வோம். அவர்களை உயர்வுக்கு கொண்டு செல்வோம். அதிமுக தொண்டர்கள் ஒன்றாகத்தான் உள்ளோம். அதிமுகவில் நடப்பது வழக்கமான ஒன்று. அதிமுகவில் அவ்வபோது பிரிவார்கள் - சிதறுவார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் ஒன்றாக சேருவார்கள். அதிமுக கட்சி சிதறுவதென்பது, அதிமுகவில் எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்திலும் இருந்தது. தற்போது எடப்பாடி காலத்திலும் உள்ளது. எடப்படி பழனிச்சாமியை நாங்கள் நம்புகிறோம். அவர் மிகச்சிறந்த அரசியல் தலைவராக இருக்கிறார். அவர் கேப்டனாக இருந்து அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவார்.

தமிழகம் திராவிட பூமி. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சி அமைக்க முடியும். எங்களை நம்பி வந்தால் நாங்கள் தூக்கி விடுவோம். எங்க்ளை நம்பி வருவோரின் உயர்வுக்கு நாங்கள் காரணமாக இருப்போம். 2019-ல் நடந்ததை இப்போதும் நினைத்து கொண்டிருக்கக்கூடாது. காலங்கள் மாறுகிறது. ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்வதை போல லட்சக்கணக்கான பொய்களை சொல்லி திமுக தேர்தலில் வெற்றி பெற்று விட்டது. அவங்க துறையே சரியில்லை என நிதியமைச்சரே சொல்கிறார்.

மற்றொரு பக்கம், அமைச்சர் துரைமுருகன் பயந்துள்ளார். ஏற்கனவே ரெய்டு வழக்குகள் அவர்மேல் உள்ளது. `ஓசி பஸ்’ என்று சொன்ன அமைச்சரை வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது எனக்கூறியதை மனதில் வைத்துக்கொண்டு, தன்னை காப்பாற்றிக்கொள்ளத்தான் அவர் பேசுகிறார். தன்னை காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை குறைத்து மதிப்பிடுகிறார். திமுகவை ஓட ஓட விரட்டக்கூடிய சிப்பாய்கள் நிறைந்த இயக்கம் அதிமுக. திமுக ஒருமுறை மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். மறுமுறை வந்ததாக சரித்திரம் இல்லை. அது துரைமுருகனுக்கே நன்றாக தெரியும்'' என்றார்.

தொடர்ந்து மாணவி பிரியா மரணத்தை குறிப்பிட்டு, “எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாத இந்த அரசு, வீராங்கனை பிரியாவுக்கும் எதையும் செய்யவில்லை. அரசு இப்போதாவது விழித்துக்கொள்ள வேண்டும். இழப்பீடு அந்தக் குடும்பத்திற்கு போதாது” என்றார்.

தொடர்ந்து அவர், சசிகலா, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சியில் சேர்க்க மறுப்பது குறித்த கேள்விக்கு, ''அதிமுக கட்சி ஒன்றாக தான் உள்ளது. உரிய நேரத்தில் கழகப் பொதுச் செயலாளரை பார்த்தால் அதற்கு ஒரு முடிவு பிறக்கும். அதற்கு காலம் தான் பதில் சொல்லும். அரசியல் எதிர்காலத்தை மதிப்பிட முடியாது. எதுவும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்” என பேசினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com