இரண்டு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருப்பதால் அதிமுகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 2, 872 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதை அடுத்து, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்கள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.