அதிமுக முதல்வர் வேட்பாளர்: அதிமுக – பாஜக இடையே வார்த்தைப் போர்!

அதிமுக முதல்வர் வேட்பாளர்: அதிமுக – பாஜக இடையே வார்த்தைப் போர்!
அதிமுக முதல்வர் வேட்பாளர்: அதிமுக – பாஜக இடையே வார்த்தைப் போர்!

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பில் அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக முன்னுக்குப்பின் முரணான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

முன்னதாக, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பார் என அக்கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார். அதனைத்தொடர்ந்து அதிமுக பாஜகவுடனான கூட்டணி தொடருமா என்ற எதிர்பார்ப்பு நிலவியபோது, தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும் அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று கூறினர்.

இதனையடுத்து பாஜக - அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கருதப்பட்ட நிலையில், அண்மையில் அரியலூரியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், “யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக தலைமை தான் முடிவு செய்யும். முதல்வர் வேட்பாளர் அதிமுக தலைவராக இருப்பினும், அது குறித்தான அறிவிப்பை பாஜக தலைமையே அறிவிக்கும்” எனத் தெரிவித்தார்.

அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பதிலளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, “ கூட்டணிக்கு முருகன் குழப்பத்தை ஏற்படுத்துவரானால் பாஜக தலைமை முருகனை நீக்க வேண்டியிருக்கும்” என்று காட்டமாக பதில் அளித்தார்.

மேலும் அமைச்சர் கடம்பூர் ராஜூ இதுகுறித்து கூறுகையில், ''அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். அடுத்தவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படப்போவதில்லை'' என தெரிவித்துள்ளார்.

இந்த காரசார கருத்து மோதல்களுக்கு இடையே கூட்டணி குறித்து பேசிய பாஜக தமிழக தலைவர் முருகன், ''பாஜவுக்கு தனிக்கொள்கை இருந்தாலும் அதிமுகவுடன் கூட்டணியில் தான் இருக்கிறது. திமுக-காங்கிரஸுக்கு தனித்தனி கொள்கை இருப்பது போல அதிமுக-பாஜகவுக்கும் தனித்தனி கொள்கை உண்டு'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பாஜகவின் அண்ணாமலை பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அதில், ''தமிழக மக்களிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் ரூ.2,000 ஆக தருவதுதான் தமிழக அரசியல். ரூ.2 ஆயிரத்தை நம்பி 5 ஆண்டை தமிழக மக்கள் அடகு வைத்து விடக்கூடாது'' என்று கூறியிருந்தார். பொங்கல் பரிசைக் குறிப்பிட்டே அண்ணாமலை இந்தக் கருத்தை கூறியதாக பலரும் பதிவிட்டனர். அப்படி அவர் பொங்கல் பரிசை குறிப்பிட்டிருந்தால், அது கண்டனத்துக்குரியது என்று அதிமுக எம்.எல்.ஏ. செம்மலையும் கருத்து தெரிவித்திருந்தார்.ஆனால், தேர்தல் நேரத்தில் 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதையே தான் குறிப்பிட்டு கருத்து கூறியதாகவும், பொங்கல் பரிசை அல்ல என்றும் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டு விளக்கமளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com