“வேலியே பயிரை மேய்ந்த கதை” - விவசாய சங்க நிர்வாகியே காவேரி ஆற்றில் தண்ணீர் திருடிய அவலம்

“வேலியே பயிரை மேய்ந்த கதை” - விவசாய சங்க நிர்வாகியே காவேரி ஆற்றில் தண்ணீர் திருடிய அவலம்
“வேலியே பயிரை மேய்ந்த கதை” - விவசாய சங்க நிர்வாகியே காவேரி ஆற்றில் தண்ணீர் திருடிய அவலம்

நாமக்கல் அருகே இலவச மின்சாரத்தை பயன்படுத்தி காவிரி ஆற்றில் தண்ணீர் திருடிய விவசாய சங்க நிர்வாகியின் செயல் புதியதலைமுறை கள ஆய்வு மூலம் அம்பலமாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப் பகுதியில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி சிலர் தண்ணீரை திருடி விற்பதாக புதியதலைமுறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. இந்த கள ஆய்வில் விவசாய சங்க நிர்வாகியே காவிரில் ஆற்றில் தண்ணீர் திருடியது அம்பலமாகியுள்ளது.

மோகனூரைச் சேர்ந்த தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருப்பவர் அஜித்தன். இவர் தனது தோட்டத்தில் உள்ள 30 ஆடி ஆழம் கொண்ட கிணற்றிற்கு கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசின் இலவச மின்சாரத்தை 04 230 010 783 என்ற எண்ணில் பெற்றுள்ளார்.இதனை தொடர்ந்து அதே கிணற்றிற்கு கடந்த மார்ச் மாதமும் வணிக பயன்பாடு என்ற பெயரில் 04 230 010 832 என்ற எண்ணில் மேலும் ஒரு மின் இணைப்பு பெற்றுள்ளார்.

கிணற்றில் மிக குறைந்த அளவே தண்ணீர் இருந்த நிலையில் தனது தோட்டத்தில் ஜல்லி கலவை தயாரிக்கும் இயந்திர பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரை தனது தோட்டத்திற்கு அருகில் உள்ள காவிரி ஆற்று பகுதியில் வாய்க்கால் வெட்டி ஆற்றுப் பகுதிக்குள் 2 நீர்மூழ்கி மின் மோட்டார்களை பொருத்தி சட்ட விரோதமாக தண்ணீரை எடுத்து வந்துள்ளார்.

இது குறித்து விவசாயிகள் கூறும் போது “வேலியே பயிரை மேய்ந்த கதையாக விவசாய சங்க தலைவராக முன்னிலை படுத்தி கொள்ளும் நபர் ஒருவரே இலவச மின்சாரத்தை பயன்படுத்தி காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீரை திருடி இருக்கிறார். இதற்கு துணைபுரிந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்

இது குறித்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவசாய சங்க தலைவர் அஜித்தனிடம் கேட்ட போது, துவக்கத்தில் எங்கு, யார் தோட்டத்தில் தண்ணீர் திருட்டு என கேட்டவர், பின்னர் வாய்க்கால் சீரமைப்பு பணிக்காக வணிக மின் இணைப்பு பெற்று அதன் மூலம் தண்ணீர் எடுப்பதாகவும் அதற்கு அனுமதி பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து மோகனூர் உதவி பொறியாளர் அருண் அவர்களிடம் கேட்ட போது “விவசாய பயன்பாட்டிற்கும், சிமெண்ட் கலவையகம் அமைந்துள்ள இடத்தில் உள்ள பணியாளர்களின் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு உள்ளிட்டவற்றிற்கு மின் இணைப்பு பெற்றுள்ளதாகவும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க மின் இணைப்பு ஏதும் வழங்கபடவில்லை என்றும் அவ்வாறு தண்ணீர் எடுத்தால் அது சட்ட விரோத நடவடிக்கை” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com