
எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “செங்கல்பட்டு விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழந்துள்ளது வேதனை அளிக்கிறது.
டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யபட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளார். இருப்பினும் இந்திய ஒன்றிய அரசு மதுவிலக்கை அறிவித்தால் மட்டுமே கள்ளச் சாராயத்தை அழிக்க முடியும். இந்தியா முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படும் நிலை உள்ளது. தமிழக முதலமைச்சர் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
சாராயத்தால் கணவரை இழந்து வாழும் விதவைகளை அரசே தத்தெடுக்க வேண்டும், குடிநோயை கட்டுபடுத்த மையங்கள் அரசே நடத்த வேண்டும். மதுவிலக்கை உடனே கட்டுபடுத்த முடியாது என்றாலும் படிப்படியாக தமிழக அரசு கொண்டு வரவேண்டும். முண்டியம்பாக்கத்தில் சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மெத்தனால் சாராயம் அருந்தினால் காப்பாற்றுவதற்கான மருந்துகள் இருந்தால் அதனை தமிழக அரசு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் விற்பனையில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என கூறும் எடப்பாடி பழனிசாமி இதுவரை இதற்காக எத்தனை போராட்டங்கள் செய்துள்ளார். கூட்டணி கட்சியினர் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். மதுவிலக்கு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி போராட தயார் என்றால் அவர்களுடன் இணைந்து நாங்களும் போராட தயார்” என்று கூறினார்.