மறைந்த அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸின் அரசியல் பயணம்..!
மாரடைப்பால் காலமான ஏ.கே.போஸின் அரசியல் பயணத்தை தெரிந்து கொள்வோம்.
1949-ஆம் ஆண்டு பிறந்த ஏ.கே.போஸ், எம்.ஏ. பட்டதாரியாவார். அவருக்கு பாக்யலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். ஏ.கே.போஸ் தனது 23-ஆவது வயதில் அதிமுகவில் இணைந்து, அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 2 முறை அதிமுகவின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். 2003 முதல் 2006 வரை முதல் முறையும், 2011 முதல் 2012 வரை இரண்டாவது முறையும் அந்தப் பதவியில் தொடர்ந்தார். 2004-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மதுரை தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கிய ஏ.கே.போஸ், தோல்வியை சந்தித்தார். அதன் பின்னர் 2006 சட்டமன்றத் தேர்தலில், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக சட்டமன்றத்திற்கு தேர்வானார்.
அதனைத் தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில், மதுரை வடக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஏ.கே.போஸ்-க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற, எஸ்.எம்.சீனிவேலு, பதவியேற்கும் முன்பே உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 2016 நவம்பரில் நடந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 3-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஓராண்டாக ஓய்வில் இருந்த ஏ.கே.போஸ், மாரடைப்பால் காலமானார்.