அலட்சியத்தின் உச்சம்! SORRY என்பது தான் உங்கள் பதிலா? - முதலமைச்சரை நோக்கி EPS கேள்வி!
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை வரும் 15ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டனங்களை வைத்து வருகின்றன.
இந்நிலையில், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு, அமைச்சர் பெரிய கருப்பன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்டார் மற்றும் சகோதரரிடம் தொலைபேசி வாயிலாக பேசினார்.
இந்நிலையில், அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஸ்டாலினை நோக்கி கடுமையாக சாடியிருக்கிறார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ முதல்வர் ஸ்டாலினின் தொலைபேசி உரையாடல்- அலட்சியத்தின் உச்சம்! கொலை செய்தது உங்கள் அரசு. "SORRY" என்பது தான் உங்கள் பதிலா? அஜித்குமார் இருந்ததால் தான் அந்த குடும்பம் தைரியமாக இருந்தது. அவர்கள் தைரியத்தை கொலை செய்துவிட்டு, "தைரியமாக இருங்கள்" என்று சொல்வதற்கு என்ன தைரியம் இருக்க வேண்டும் இந்த பொம்மை முதல்வருக்கு? முதல்வரின் பேச்சில் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லையே? "என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்" என்று சொல்கிறீர்களே... போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா ?
வேறென்ன செய்துவிடப் போகிறீர்கள்? கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களின் போது, உறவினர்களை அஞ்சலி செலுத்தக் கூட விடாமல், காசைக் கொடுத்து அவர்களின் குரலை ஒடுக்கலாம் என்று முயன்றீர்களே.. அதை போன்ற முயற்சிதானே இதுவும்? அஜித்குமார் இறந்து நான்கு நாட்கள் கழித்து, எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு ,அதன் அடிப்படையில் நீதிமன்றம் விசாரித்து , கடுமையான விமர்சனங்களை வைத்த பிறகு FIR, கைது எல்லாம் நடக்கிறது.
உங்கள் ஆசை வார்த்தைக்கு தமிழ்நாட்டு மக்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? அஜித்குமார் குடும்பமும் ஏமாற வேண்டுமா? "நடக்கக் கூடாதது நடந்துடுச்சு" என்று சொல்ல நா கூசாவில்லையா உங்களுக்கு? இது என்ன முதல் முறை உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறதா? இது 25-வது முறை! இந்த அரசு எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இந்த அலட்சிய போட்டோஷூட் போன் காலே சாட்சி!” என்று பதிவிட்டுள்ளார்.