"பாஜக விழுங்க பழனிச்சாமி புழு அல்ல" ... கூட்டணிக்குள் பரபரப்பை கிளப்பிய EPSன் பேச்சு!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் தற்போது இருந்தே அனல் பறக்க தொடங்கியுள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு கட்சிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றன.
சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி தான் அமையும் என கூறினார்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததை ஆளும் கட்சியான திமுக கடுமையாக விமர்சித்தது .."பாஜகவிடம் அதிமுவை அடகு வைத்துவிட்டார்கள் என்றும், பாஜக அதிமுகவை விழுங்கிவிடும் எனவும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இப்படி பரபரப்பான சூழலில் ,தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பெரும்பான்மை பெற்று தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும் கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது எனவும் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து பேசி வருகிறார்.
இந்த நிலையில் "மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்" என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்..நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பேசிய அவர், "பழனிசாமிக்கு படிப்புனா கசக்கிறது என முதல்வர் ஸ்டாலின்கூறிவருகிறார்..படிப்பு இனித்ததால்தான் இத்தனை கல்லுாரிகளை திறந்தோம். முதல்வர் ஸ்டாலின் எத்தனை கல்லுாரிகளை திறந்தார் ?..
நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக உதயநிதி கூறினார். இப்போது வரை ரகசியத்தை பூட்டி வைத்துள்ளனர். நீட் தேர்வு ரத்தாகி விடும் என இருந்த 25 பேர் இறந்துள்ளனர். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அரசுதான் பொறுப்பு” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ” அதிமுகவை பாஜக விழுங்கி விடும் என ஸ்டாலின் கூறுகிறார். பழனிசாமி என்ன புழுவா மீன் திண்பதற்கு. கூட்டணியை கட்சிகளை ஸ்டாலின் விழுங்கிக்கொண்டு இருக்கிறார். காங்கிரஸ் தேய்ந்து விட்டது. கம்யூனிஸ்ட் கட்சி கண்ணுக்கு தெரியவில்லை. விசிக காரணம் சொல்லி ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சரித்தர வெற்றி பெறும்.” என ஆவேசமாக பேசினார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து "தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை அதிமுக தனித்தே வெற்றி பெரும்" என பேசி வருவது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.