ஆதிதிராவிடர் நலத்துறை தரவரிசை பட்டியல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

ஆதிதிராவிடர் நலத்துறை தரவரிசை பட்டியல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
ஆதிதிராவிடர் நலத்துறை தரவரிசை பட்டியல் வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

தமிழக அமைச்சரவை பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறையை 34-வது இடத்திலிருந்து அகற்றி, முன்வரிசைக்கு கொண்டுவரக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த வெள்ளையன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், '’தமிழகம் பல முதலமைச்சர்களை கண்டுள்ளது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தது. அதேபோல் 1969 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தபோது 10வது இடத்திற்குச் சென்றது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 7.21 கோடி பேரில் 21.11 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்.

1971ஆம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சக வரிசைப்பட்டியலில் 3வது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது ஆதிதிராவிட நலத்துறை 34வது இடத்தில் உள்ளது. இதனால் பாகுபாடு காட்டப்படுவதாகவும், சரிசமமாக கையாளப்படவில்லை எனவும் தோன்றுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே தமிழக அமைச்சரவையின் பட்டியலில் ஆதிதிராவிடர் நலத்துறையை 34-வது இடத்திலிருந்து அகற்றி, முன்வரிசைக்கு கொண்டுவர உத்தரவிட வேண்டும்'’ எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், '’ஆதிதிராவிட நலத்துறை, அமைச்சரவை பட்டியலில் 34வதாக இடம் பெற்றிருப்பதால், அந்த சமூகத்தைச் சார்ந்த மக்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், ஒவ்வொரு முறையும் அமைச்சரவைப் பட்டியல் வரிசைகள் மாற்றப்படுகின்றன. அகர வரிசை அடிப்படையில் பட்டியலிட்டால் ஆதிதிராவிட நலத் துறைத்தான் முதலாவதாக வரும். எவ்வித குறிப்புமின்றி அமைச்சரவைப் பட்டியலில் உள்ள முதல் எட்டு துறைகளை வரிசைப்படி தெரிவிக்க இயலுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, மனுதாரர் தரப்பில் பதில் கூற இயலாததைத் தொடர்ந்து, வழக்கைத் தொடர்ந்த நீங்களே அந்த வரிசைகளை அறியாதபோது, மக்கள் எந்த வரிசையில் வருகிறது என அறிந்து புண்பட வாய்ப்பில்லை. மனுதாரர் நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்பப்பெறுவதாக குறிப்பிட்டதை அடுத்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com