எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு; முதல்வர் கடிதம்... மீண்டு வந்த தமிழ்

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு; முதல்வர் கடிதம்... மீண்டு வந்த தமிழ்
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு; முதல்வர் கடிதம்... மீண்டு வந்த தமிழ்

தொல்லியல் பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தமது ட்விட்டர் பக்கத்தில் “உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரியில் முதுகலைப் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் விளம்பரத்தை பதிவிட்டிருந்தார்.

அந்த விண்ணப்பத்தில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து பண்டைய அல்லது இடைக்கால இந்திய வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், அவற்றில் சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம், அரபு அல்லது பாரசீக மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செம்மொழி அந்தஸ்தில் உள்ள தமிழ் மொழி இடம்பெறவில்லை என்று சு.வெங்கடேசன் எம்.பி சுட்டிக்காட்டி குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து தமிழ் மொழி மீது திட்டமிட்டு கலாச்சார படையெடுப்பு நடத்தப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்தார். பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியாக சமஸ்கிருதம், அரபி உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழை திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது, தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு என கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு தமிழகத்தில் பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொல்லியல் துறை நடத்த உள்ள 2 ஆண்டு பட்டயப்படிப்பில் சேர்வதற்கான தகுதிகளில் ஒன்றாக தமிழ் முதுகலைப்படிப்பையும் சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரதமர் மோடியிடம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில், தொல்லியல் துறை நடத்த உள்ள 2 ஆண்டு பட்டயப்படிப்பில் சேர சமஸ்கிருதம், பாலி, பிராக்ருதம், அரபி அல்லது பாரசீகம் ஆகிய செம்மொழிகளில் ஒன்றில் முதுநிலை பட்டம் அவசியம் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் இவற்றுக்கெல்லாம் முன்பு செம்மொழியாக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ் தகுதி பட்டியலில் முழுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தொல்லியல் பட்டயப்படிப்பில் செம்மொழியான தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழி சேர்க்கப்பட்டு புதிய அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com