சூரிய ஒளியை இழந்து தவிக்கிறோம் - நயன்தாரா இரங்கல்

சூரிய ஒளியை இழந்து தவிக்கிறோம் - நயன்தாரா இரங்கல்
சூரிய ஒளியை இழந்து தவிக்கிறோம் - நயன்தாரா இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நடிகை நயன்தாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, சென்னை அண்ணாசாலையில் உள்ள ராஜாஜி மஹாலில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. காலை முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, மாலை 4 மணியளவில் கருணாநிதியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நயன்தாரா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணிநேர சோதனை இது என சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். நாம் ஒரு காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை, இழந்து வாடுகின்றோம். 

நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்திருக்கிறது. அவர் ஆற்றியிருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும் போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும் திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இந்த மீளாத் துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்புக் காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்” என்று அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com