கொரோனாவால் பாதித்த குடும்பங்களின் மாணவர்களுக்கு 3.5கோடி கல்வி உதவித்தொகை; சூர்யா அறிவிப்பு

கொரோனாவால் பாதித்த குடும்பங்களின் மாணவர்களுக்கு 3.5கோடி கல்வி உதவித்தொகை; சூர்யா அறிவிப்பு
கொரோனாவால் பாதித்த குடும்பங்களின் மாணவர்களுக்கு 3.5கோடி கல்வி உதவித்தொகை; சூர்யா அறிவிப்பு

பொதுமக்கள் மற்றும் ‘கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு’ பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயும், திரையுலகை சார்ந்த விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள், திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் சூர்யா நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாயும் கல்வி ஊக்கத்தொகையாக ‘சூரரைப் போற்று’ படத்தில் விற்பனை தொகையிலிருந்து நடிகர் சூர்யா வழங்கியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “அனைவருக்கும் வணக்கம். ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது  அருகில் இருப்பவர்களுக்கு ஒரு கைப்பிடி அளவேனும் இருப்பதை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம். கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படை தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில், மாணவர்களின் கல்விக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணரமுடிகிறது.

பொதுமக்கள், திரைத்துறையினர், “கொரோனா தொற்றிலிருந்து’மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள் ஆகியோருக்கு ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்துகோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம். அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு’ பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவத்துறை பணியாளர்கள் மேலும் பொதுநல சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத்தொகையாக வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

ஐந்துகோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்பட தொழிலாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத, திரையுலகை சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள்,பிரதிநிதிகள், மக்கள் தொடர்பாளர்கள்,திரையரங்க தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரிகளில் பயில்கிறவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

‘கல்வியே ஆயுதம்:கல்வியே கேடயம்’ என்கிற அடிப்படை கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.

அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவி தொகைக்கான தேர்வு அமையும். www.agaram.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்த பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புகிறேன். இந்த பேரிடர் காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கிறது. இந்த தருணத்தில் பொருளாதார நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com