"விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை"- அன்புமணிக்கு சூர்யா பதில்

"விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை"- அன்புமணிக்கு சூர்யா பதில்

"விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை"- அன்புமணிக்கு சூர்யா பதில்
Published on

நடிகர் சூர்யாவுடைய ஜெய்பீம் படம் தொடர்பான அன்புமணி ராமதாஸின் விமர்சனத்துக்கு "அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது" என சூர்யா பதிலளித்துல்ளார்.

இயக்குனர் த.சே.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் குறித்து நேற்றைய தினம் பாமக இளைஞரணி தலைர் அன்புமணி ராமதாஸ் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதில் அவர், “படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப்படக்கூடாது. ‘ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் அக்னி கலசம் இடம்பெற்றது ஏன்? இந்த விஷயத்தில் சூர்யா பதிலளிக்காதது ஏன்? ஏன் இந்த அறமற்ற அமைதி, சூர்யா? மக்களின் வினாக்களுக்கு சூர்யா விடையளிக்க வேண்டும்” எனக்கூறி, நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளைக் கேட்டு கடிதமொன்று எழுதினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், சூர்யா இன்று அவருக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.

சூர்யா தனது அக்கடிதத்தில், “நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதை தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. ‘இத்திரைப்படத்தின் கதை, சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு புணையப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம். எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரேமாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை.

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட பெயர் அரசியலுக்குள் சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்த பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை.

அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், பெயர் அரசியலால் மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது. நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதவும் எனக்கு இருக்கிறது. விளம்பரத்துக்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவம், சகோதரத்துவம் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம்” என்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com