வாழ்வியல் கதைகளுடன் திருக்குறள் பேசும் நடிகர் சிவகுமார்! புதியதலைமுறையில் கண்டுகளியுங்கள்

வாழ்வியல் கதைகளுடன் திருக்குறள் பேசும் நடிகர் சிவகுமார்! புதியதலைமுறையில் கண்டுகளியுங்கள்
வாழ்வியல் கதைகளுடன் திருக்குறள் பேசும் நடிகர் சிவகுமார்! புதியதலைமுறையில் கண்டுகளியுங்கள்

நடிகர் சிவகுமார் வழங்கும் “திருக்குறள் 100” என்ற திருக்குறள் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியானது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒளிபரப்பாகிறது. இதனையொட்டி நடிகர் சிவகுமார் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.

நடிகர் சிவகுமார் நூறு திருக்குறள்களை எடுத்துக்கொண்டு அதற்கு ஏற்ற பொருத்தமான வாழ்க்கை அனுபவங்களை இணைத்து “வள்ளுவர் வழியில் வாழ்ந்தவர்களின் வரலாற்றுடன் குறள்” என்கிற பார்வையில் “திருக்குறள் 100” என்கிற நூலை எழுதி இருக்கிறார். இதுவரை திருக்குறளுக்கு வார்த்தைகள் வடிவில் பரிதி, பரிமேலழகர் முதல் கலைஞர், சாலமன் பாப்பையா வரை ஏராளமான பேர் உரை எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் சிவகுமார் வள்ளுவர் வழியில் நின்று வாழ்ந்த, தங்களை அறியாமலேயே குறளின் வழியே சென்ற மனிதர்களின் வாழ்க்கையின் வழியாக இந்த உரையை எழுதியுள்ளார்.

“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு” என்ற குறளில் தொடங்கி 100-வது கதையாக, மலக்குழி இறங்கும் துப்புரவுத் தொழிலாளியின் கதையைக் கூறி “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று அதற்குரிய குறளைக் கூறி நிறைவு செய்துள்ளார்.

பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள “திருக்குறள் 100” தொகுப்பின் நிகழ்ச்சி, சிறப்பு நிகழ்ச்சியாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளில் 15ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதிவரை ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் என 3 நாட்களாக தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இதனையொட்டி நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், “40 ஆண்டுகள் திரைப்படங்களில் பணியாற்றினேன். நாடகங்களில் மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் பணியாற்றினேன். என் 64 வயதில் `இனி நான் மேக்கப் போட்டு நடிப்பதில்லை’ என முடிவெடுத்தேன். ஸ்டாலின் குணசேகரன் 18 ஆண்டுகளாக ஈரோடு புத்தக விழாவை எந்த கட்டணமும் இல்லாமல் நடத்தி வருகிறார். அவர் தான் என்னை மேடைப்பேச்சுக்கு அழைத்து வந்தார்கள்.

அதன்பிறகு நான் இலக்கியம் பக்கம் திரும்பினேன். கம்பராமாயணம் மொத்த கதையையும் 100 பாடல்கள் வழியாக விளக்கிப் பேசியது நான்தான் என இப்போது கூறுகிறார்கள். அது மிகப்பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. மகாபாரதத்தை 2.10 நிமிடங்களில் விளக்கிப் பேசினேன். இவையெல்லாம் இப்போது யூடியூப் தளத்தில் கிடைக்கிறது.

இந்நிலையில் இப்போது திருக்குறளைத் தொடங்கியிருக்கிறேன். இதில் இறங்க வேண்டாம் என்று முதலில் பயமுறுத்தினார்கள். மூன்றரை வருடம் ஆராய்ச்சி செய்து இந்த திருக்குறள் கதைகளைப் பேசியுள்ளேன். இப்போது இதன் உரிமையை புதிய தலைமுறை பொங்கல் திருநாளில் ஒளிபரப்புகிறார்கள். எல்லோரும் பார்த்து ரசியுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி!” என்றார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com