“கலைஞர் போன்ற தலைவர்கள் தான் நம் முதல்வருக்கு எதிரி!”- சுவாரஸ்ய காரணம் சொல்லும் பொன்வண்ணன்

“கலைஞர் போன்ற தலைவர்கள் தான் நம் முதல்வருக்கு எதிரி!”- சுவாரஸ்ய காரணம் சொல்லும் பொன்வண்ணன்
“கலைஞர் போன்ற தலைவர்கள் தான் நம் முதல்வருக்கு எதிரி!”- சுவாரஸ்ய காரணம் சொல்லும் பொன்வண்ணன்

“திட்டுவது மற்றவர்களின் குணம். திட்டினாலும் அவர்களுக்காகவும் உழைத்து கொண்டு இருப்பேன் என்பது தான் நம் முதல்வர் ஸ்டாலினின் மனம்” என்று பேசியுள்ளார் நடிகர் எம் எஸ் பாஸ்கர்.

சென்னை கிழக்கு சார்பில் துறைமுகம் தொகுதி - யானைகவுனி பகுதியில் 'திரைவானம் போற்றும் தமிழ்மானம்' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திரைக்கலைஞர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியை ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் ராஜேஷ், பொன்வண்ணன், பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், போண்டா மணி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேச்சு

“முதல்வர் ஸ்டாலின், மிக சிறந்த உழைப்பாளி. மிகவும் சிரிக்க மாட்டார். நாட்டை பற்றி யோசித்து கொண்டே இருப்பார். அவரை வாழ்தினாலும் வசைபாடினலும் சரி... எடுத்து கொள்ள மாட்டார். அன்று என்னிடம் எப்படி பேசினாரோ, அதேபோலதான் இன்றும் என்னுடன் பேசுகிறார். மயில்சாமி இருந்திருந்தால், அவனும் என்னுடன் இந்த மேடையில் இருந்திருப்பான். முதல்வரை பொறுத்தவரை, வயதானாலும் அது தெரியாமல் உழைத்து கொண்டு இருப்பவர் அவர். பல நல்ல திட்டங்களை கொண்டுவந்துள்ளார் அவர். அவரின் நல்ல நல்ல திட்டங்களை பாராட்டலாம். திட்டுவது மற்றவர்களின் குணம். ஆனால் திட்டினாலும் அவர்களுக்காகவும் உழைத்து கொண்டு இருப்பேன் என்பது தான் முதல்வர் ஸ்டாலினின் மனம்”

நடிகர் பொன்வண்ணன் பேச்சு

“இஸ்லாமியத்தில் 45 வயதில் நபிகள் நாயகம் உலகத்தை தெரிந்து கொண்டனர். காலம் ஒரு மிக சிறந்த நபரை அப்படித்தான் தேர்வு செய்கிறது. அதில் தான் வெற்றி. அப்படி ஸ்டாலினை, முதல்வராக தேர்ந்தெடுப்பதில் நம் மக்கள் வெற்றி அடைந்துள்ளனர். இதற்கு முன் இருந்த அறநிலையத்துறை அமைச்சரை போல் அல்லாமல், 24 மணி நேரமும் கூட்டத்துடன் உள்ளார் அமைச்சர் சேகர் பாபு. சேகர் பாபு நடத்தும் பொது கூட்டம் அனைத்தும் மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள் தான். மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களின் புகழ்ச்சி அனைத்தும் முதல்வருக்கு தான் செல்லும்

முதல்வர் தொடர்பான புகைப்பட கண்காட்சியை ஒரு அருங்காட்சியகம் போன்று ஒழுங்குபடுத்தி, அழகாக செய்துள்ளார் சேகர் பாபு. முதல்வரை சிறுவயதில் இருந்து நான் பார்த்துள்ளேன். எனக்கு திருமணமான தருணத்தில் ரயில் பயணம் மேற்கொண்ட போது என்னை வந்து வாழ்த்தி, அவர் பயணித்த தனக்கான 4 பேர் கொண்ட இருக்கையை எனக்கு கொடுத்தார். துர்கா ஸ்டாலின் அவர்கள் எழுதிய புத்தகத்தை நான் படித்து முதல்வர் பற்றி தெரிந்து கொண்டேன். ராஜ ராஜ சோழனுக்கு பிறகு அந்த வரலாறு வந்தது கலைஞர், ஸ்டாலின் இருவருக்கும் தான்.

பதவியில் இருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி... மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார் முதல்வர். 68 வயதில் ஆட்சிக்கு வந்த முதல் முதலமைச்சர் ஸ்டாலின் தான். பல அனுபவங்களை பெற்று, பெரிய தலைவர் தந்த திட்டங்கள் போன்று அதற்கும் மேலான திட்டங்களை வகுத்து வருகிறார். கலைஞர் போன்ற  மற்ற தலைவர்கள் தான் அவருக்கு எதிரி. ஏனென்றால் அவர்கள் செய்ததை விட அதிகமாக செய்ய வேண்டும் என்கிற நிலை அவருக்கு இருக்கிறது. அந்த காரணத்தினால் தான் அப்படி சொல்கிறேன். மூன்று காலங்களையும் அறிந்து செயல்படும் பக்குவம் ஸ்டாலினுக்கு உள்ளது. தீர்க்கமான முதல்வராக நினைத்ததை செய்கிறார். தான் செய்வதை திட்டமிட பலரை வைத்துள்ளார்” என்றார்.

நடிகர் ராஜேஷ் பேச்சு

“70 வயது வரை உரமிடப்பட்டு, தற்போது தமிழ்நாட்டின் தங்கமாக மாறி உள்ளார் முதல்வர் ஸ்டாலின். காலம் அவர் முதல்வராக பதவியில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து உள்ளது. கலைஞர் போல் 16 வயதில் தன்னை கழகத்தில் இணைத்து கொண்டவர் முதல்வர் ஸ்டாலின். காவல் துறை, அரசு துறை என்று யார் செய்தால் சரியாக இருக்கும் என்று தீர்மானித்து செய்கிறார். தனக்கு எதிராக பேசுவோர் முன்பும்கூட அருமையான சிரிப்பை வெளிப்படுத்தி வருகிறார். முதல்வர் அனைத்து பதில்களையும் தன் செயலில்தான் காண்பிக்கிறார்.

கலைஞர் ஆட்சிக்கு வந்த போது முதல் ஊதியத்தை பெற்றது நான் தான். அந்தவகையில் அவருக்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். பசியில் இருப்பவர்களுக்கு உணவளித்து, அதை பார்த்து ரசிப்பது ஒரு நல்ல குணம். அந்த குணம் கலைஞரிடம் இருந்து ஸ்டாலின் அவர்களுக்கு வந்துள்ளது. சரியான நேரத்தில் ஆட்சிக்கு சரியாக வந்துவிட்டார் ஸ்டாலின். ஆதரவில்லாத மத்திய அரசின் கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறார் தமிழ்நாடு முதல்வர். சென்னையில் சாலை மற்றும் மெட்ரோ பணிக்காக குழி தோண்டி வைத்ததற்கு சிலர் அவரை இப்போது திட்டுகின்றனர். ஆனால் இன்னும் 2 வருடத்தில் பல இன்பத்தை அனுபவிக்க தான் இவை எல்லாம்.

சிறைக்கு சென்ற பின்னும் நான் அரசியலில் தொடர்வேன் என்ற அவரின் உறுதிதான், தற்போது அவரை தமிழ்நாடு முதல்வராக உள்ளார். கலைஞரின் வசனம் பேசி தான் என் திக்குவாய் போயிற்று. சாப்பிடும் ஒவ்வொரு இடத்திலும் நன்றியாய் அவரை நினைக்கிறேன். கலைஞர் அநேகம் சொல்லி கொடுத்ததினால் தான் ஸ்டாலின் தற்போது முதல்வராக உள்ளார். சமத்துவம் பின்பற்ற வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி” என கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com