சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா| ’இங்க அவ்ளோ சந்தோஷம் இருக்கு..’ நெகிழ்ந்து பேசிய நடிகர் கார்த்தி!
சென்னையில் ஒரு கிராமத் திருவிழா என்ற நிகழ்ச்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதை நேரில் கண்டுகளித்த நடிகர் கார்த்தி நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் செம்பொழில் அமைப்பு சார்பில் சென்னையில் ஒரு கிராமத் திருவிழா நடைபெறுகிறது.
நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு கிராம திருவிழா மற்றும் பாரம்பரிய அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது..
இந்த கிராமத்து திருவிழாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கிய இந்த கிராமத்து திருவிழா வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
என்னென்ன சிறப்புகள் உள்ளது?
சென்னையில் ஒரு கிராமத் திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், தானிய வகைகள், விவசாயம் சார்ந்த புத்தகங்கள், மரங்களால் ஆன கைவினைப் பொருட்கள், மாட்டு வண்டி, குதிரை வண்டி, பானை அடித்தல், இளவட்டக்கல் உள்ளிட்டவை வைக்கப்பட்டு கிராமத்தை கண் முன் காட்சிப்படுத்தும் விதமாக 120-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது...
இந்த நிகழ்விற்கு இன்று மற்றும் நாளை நுழைவுக் கட்டணமாக 50 ரூபாயும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் ரூபாய் 150 வசூலிக்கப்படுகிறது.. காலை 8 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை திருவிழா நடைபெறுகிறது..
நெகிழ்ந்து பேசிய நடிகர் கார்த்தி..
சென்னையில் கிராமத் திருவிழா குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், நகரத்தில் இருக்கும் நாம் விடுமுறை நாட்களில் போய் கிராமத்தில் இளைப்பாறுவோம், இயந்திரத்தனமான வாழ்க்கையில் பழைய விஷயங்களை நாம் மறந்து கொண்டிருக்கும் பொழுது அதை நினைவுபடுத்தும் விதமாகவும், சிக்னலில் கூட நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறை இளைப்பாரும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று கூறினார்.
திருவிழாவை நேரில் கண்டுகளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்தி, “சென்னையில் ஒரு கிராமத்து திருவிழா, இது இரண்டாவது வருஷம். போன வருஷமே குழந்தைகள், குடும்பங்கள்னு நிறையபேர் வந்து என்ஜாய் பண்ணிட்டு போனாங்க. ஏன்னா இங்க இருக்க ஒவ்வொரு ஸ்டாலும் கிராமத்து பொருட்களால பண்ணிருக்காங்க, சிறு தானியங்கள பயன்படுத்தி திண்பண்டங்கள், உணவு ஸ்டால்கள் நிறைய இருக்கு. சமைத்து பேக் செய்யப்பட்ட உணவுகளும், தற்போது சமைத்து தரக்கூடிய கிராமத்து உணவுகளும் இங்க கிடைக்குது. இங்க அவ்ளோ பெரிய சந்தோஷம் இருக்கு” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.