எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டி சமயபுரம் கோயிலுக்கு அக்னிச் சட்டி ஏந்திய நடிகர் கஞ்சா கருப்பு!

எடப்பாடி பழனிசாமி அடுத்து முதல்வராக வர வேண்டி நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் குடும்பத்துடன் அக்னிச் சட்டி ஏந்தி வந்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.
ganja karuppu
ganja karuppupt desk

திரைப்பட நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக ஆனதை தொடர்ந்து அடுத்ததாக முதல்வராக வர வேண்டும் என வேண்டிக்கொண்டு மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் அக்னிச்சட்டி ஏந்தி பால்குடம் எடுத்து, பூக்கூடை சுமந்து வந்தும் நேர்த்திக் கடன் செலுத்தினார்.

முன்னதாக சமயபுரம் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் இருந்து, கஞ்சா கருப்பு மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அக்னிச்சட்டி ஏந்தியும், மகன் பால்குடம் சுமத்தும், மகள் வேப்பிலை உடை அணிந்து பூக்கூடை ஏந்தியும் உறவினர்கள் புடைசூழ கோவிலை வலம் வந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கஞ்சா கருப்பு, எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக இருக்கிறார். அவர் அடுத்து முதலமைச்சர் ஆக வேண்டும் என எனது குடும்பத்துடன் வேண்டிக் கொண்டு மகன் மகள் மற்றும் உறவினர்கள் உட்பட அனைவரும் சமயபுரம் மாரியம்மனுக்கு அக்னிச்சட்டி சுமந்து வந்தும் நேர்த்திக் கடனை செலுத்தி உள்ளோம்.

ஆளுங்கட்சியை பற்றி நான் சொல்லத் தேவையில்லை. அது மக்களுக்கே தெரியும். இன்றைய காலகட்டத்தில் மின்சார கட்டணம், விலைவாசி உயர்ந்து வருகிறது. இதனால் நல்ல ஆட்சி தமிழகத்தில் அமைய வேண்டும் என சமயபுரம் மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளேன்.

திரைப்பட வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. நாற்காலி, இறைவன் மிகப்பெரியவன், இடி முழக்கம், சபரி ஐயப்பா போன்ற படங்களில் நடித்து வருகிறேன் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com