நடிகர் தனுஷ் போலி ஆவணங்கள் தாக்கல்: மேலூர் தம்பதி புகார்
நடிகர் தனுஷை மகன் எனக்கோரி மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தனுஷ் தரப்பில் போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பதிவாளருக்கு கதிரேசன் புகார் மனு அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கோரியும், தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாய் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரியும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தனுஷ் உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் நடிகர் தனுஷ் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். பின்னர் நீதிபதியின் உத்தரவின் பேரில் நடிகர் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்களை அரசு மருத்துவர்கள் சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். பல கட்ட விசாரணைக்குப்பின் மேலூர் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷிடம் பராமரிப்பு செலவு கோரி கதிரேசன் தம்பதி தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இந்நிலையில் அந்த வழக்கில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியதாகவும், இதனால் நடிகர் தனுஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கதிரேசன் உயர்நீதிமன்ற கிளை பதிவாளருக்கு பதிவுத் தபால் மூலம் புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
தனுஷ் வழக்கில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தனுஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வக்காலத்தில், தனுஷின் கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10 ஆம் வகுப்பு மெட்ரிக்குலேசன் சான்றிதழ், அரசிதழ், சென்சார் போர்டு சான்றிதழ், ஆதார் கார்டு, குடும்ப அட்டை ஆகியன போலியானது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தனுஷ் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றம் தவறாக வழிநடத்தி நிவாரணம் பெற்றுள்ளனர். இதனை உள்நோக்கத்துடன் தனுஷ் செய்துள்ளார். இவரது செயலால் நீதிமன்றத்தின் மதிப்புக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளது. இதனால் போலி ஆவணம் தாக்கல் செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.