கண்கலங்காமல் தைரியமாக இருக்க வேண்டும்.. பெண் வழக்கறிஞருக்கு ஆறுதல் கூறிய நீதிபதி!
இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உத்தரவு பிறப்பிக்கும்போது உணர்ச்சிவசப்பட்டது, நீதிமன்ற அறையில் இருந்தவர்களை கலங்கச் செய்தது.
பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரப்பப்பட்டன. இது குறித்தான வீடியோக்களை இணையத்திலிருந்தும் சம்பந்தப்பட்ட இணையத்திலிருந்தும் நீக்கக் கோரி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் மத்திய அரசிடம் புகார் அளித்துள்ளார்.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாததால் மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ” குடிமக்கள் அனைவரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.
இதுபோன்ற வழக்குகளில் தமிழக காவல் துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ” என டிஜிபிக்கு உத்தரவிட்டநிலையில், சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞரை சந்தித்த நீதிபதி, ”கண்கலங்காமல் தைரியமாக இருக்க வேண்டும்” என ஆறுதல் கூறினார்.
அப்போது, நீதிபதியும் உணர்ச்சிவசப்பட்டது, நீதிமன்ற அறையில் இருந்தவர்களை கலங்கச் செய்தது. மேலும், 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோக்களை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.