கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை - அமைச்சர் சேகர்பாபு
கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்யும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
இந்து அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கையின் போது எதிர்க்கட்சி தலைமை கொறடா, எஸ் பி வேலுமணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் பல ஆண்டுகளாக கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடியிருப்பு பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, ''திருக்கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வழி செய்யும் மசோதாவிற்க்கு 2019ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியில் நீதிமன்றம் தடைவிதித்தது. இதன் மூலம் கோயில் நிலங்களில் பழங்காலமாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் முதல்வர் பதவியேற்ற பிறகு இது தொடர்பான துறை சார்ந்த ஆய்வுக் கூட்டம் நடத்தது, தடை ஆணையை திரும்பப் பெறுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டிருக்கிறார்.
அதனடிப்படையில் சீராய்வு மனு மூலம் தடையானை திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது கூடிய விரைவில் தடையை திரும்பப் பெறப்பட்டு கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்யும். மேலும் பலங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் ஜமீன்தார்கள் மற்றும் பண வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த நிலங்களை கோவில்களுக்கு தானமாக வழங்கினர். தானமாக வழங்கிய கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. ஆகையால் சிக்கல்கள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு பட்டம் வழங்குவதற்கான தடை ஆணை திரும்பப் பெற்றவுடன் கோயில்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.