
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். பா.ஜ.க நிர்வாகியான இவர், தனது மனைவி, மகன் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று (3 ஆம் தேதி) இரவு இவரது வீட்டின் அருகேயுள்ள இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மதுபோதையில் இருந்தவர்கள் அங்கிருந்து சென்ற நிலையில், மோகன்ராஜ் தனது வீட்டிற்கு வந்து விட்டார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து மது போதையில் இருந்தவர்கள் மோகன்ராஜின் வீட்டிற்கு வந்து அவரை வெளியே அழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அருவாளால் மோகன்ராஜை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இந்நிலையில், மோகன்ராஜின் அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், சகோதரர் செந்தில்குமார் ஆகியோரையும் வெட்டினர். இதில் நான்கு பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல் துறையினர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் கோவை சரக ஐ.ஜி பவானீஸ்வரி விசாரணை மேற்கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வெங்கடேசன் என்பதும் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த செந்தில்குமாரிடம் ஓட்டுனராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், மோகன் ராஜிக்கும் வெங்கடேசுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், நான்கு பேர் உடலும் பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே இறந்தவர்களின் உடலை பெற்று கொள்வோம் எனக் கூறி திங்கட்கிழமை பல்லடம் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் பா.ஜ.கவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பல்லடம் அருகே உள்ள தொட்டம்பட்டியில் பதுக்கி வைத்திருப்பதாக கூறிய அவரை அங்கு போலீசார் அழைத்து சென்ற போது தண்ணீர் தொட்டியின் மீது ஏறிய செல்லமுத்து பின்னால் வந்த போலீசாரை தள்ளி விட்டு தண்ணீர் தொட்டியின் மேலே இருந்து கீழே குதித்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அவனது வலது கால் முறிந்தது. அதனைத் தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்த பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி சாமிநாதன், இறந்தவர்களின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் கொலையாளிகளை கைது செய்யும் வரை இறந்தவர்களின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறினர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்தை கைது செய்த போலீசார், அவனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களும் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து உறவினர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், குற்றவாகிகளை விரைவாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு மாவட்ட எஸ்.பி உறுதி அளித்ததை தொடர்ந்து இறந்தவர்களின் உடலை கடந்த செவ்வாய் மாலை பெற்று கொண்டனர்.
இதைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்ற ராஜ்குமார் மற்றும் சோனை முத்தையா இருவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தனர். சரணடைந்த அவர்களை பல்லடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஆயதங்களை வழங்கியதாக வெங்கடேஷின் தந்தை அய்யப்பனை (52) பல்லடம் அருள்புரம் அருகே கைது செய்த பல்லடம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையில் இருந்த வெங்கடேஷ், கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கள்ளக் கிணறு அருகே பதுக்கி வைத்திருப்பதாகக் கூறி இன்று அதிகாலை அங்கு அழைத்துச் சென்றனர். அப்போது வண்டியில் இருந்து கீழே இறங்கி அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு இருந்த தனிப்படையினர் வெங்கடேசனை இரண்டு கால்களிலும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட வெங்கடேசுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் விசாரணையில் இருந்த சோனை முத்தையாவை மருத்துவ பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இது குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் கூறியபோது...
"4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்கிணறு பகுதியில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறிலும் முன்விரோதம் காரணமாகவும் கொலை சம்பவம் நடந்துள்ளது. விசாரணைக்காக வெங்கடேஷை சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே அழைத்துச் சென்ற போது தப்ப முயன்றதால் அவர் மீது சிறிய அளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட வேண்டியதாயிற்று" என விளக்கமளித்த அவர், "தொடர்ந்து 4 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெங்கடேஷ் மற்றும் சோனை முத்தையா ஆகியோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெங்கடேஷ் என்ற ராஜ்குமார், விஷால் என்ற சோனை முத்தையா, செல்லமுத்து, வெங்கடேஷின் தந்தை அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ; மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம்” எனத் தெரிவித்தார்.