தமிழ்நாடு
இளைஞரின் உயிரை பறித்த சாலை பள்ளம் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சேதம்
இளைஞரின் உயிரை பறித்த சாலை பள்ளம் சீரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் சேதம்
சென்னையில் சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால் நேர்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட அந்த பள்ளம் மீண்டும் சேதமடைந்துள்ளது.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த முகமது யூனுஸ், இரு சக்கர வாகனத்தில் சின்னமலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையின் நடுவில் இருந்த பள்ளத்தால் நிலைதடுமாறி தவறி விழுந்த அவர் மீது அரசுப் பேருந்து ஏறி விபத்து நேர்ந்தது. அதில் முகமது யூனுஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்துக்குபின் அந்த பள்ளம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட நிலையில், மழையால் மீண்டும் சேதமடைந்துள்ளது. சைதாப்பேட்டை மட்டுமின்றி சென்னையின் முக்கிய சாலையான அண்ணா சாலை உள்ளிட்ட இடங்களிலும் இதுபோன்ற பள்ளங்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் சாலைகளை முறையாக பராமரிக்காதது ஏன் என கேள்வி எழுப்பும் மக்கள், சாலைகளின் தரம் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக 'புதிய தலைமுறை'க்கு விளக்கமளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மழை நீர் வடிகால் பணிகளுக்காக புதிதாக பள்ளம் தோண்டக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தி இருப்பதாக கூறினார். 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் சாலைகள் மோசமாக இருப்பது தொடர்பாக புகார் அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாம்: ராஜஸ்தான்: சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக நீதிபதி மீது போக்சோ வழக்குப்பதிவு

