டங்ஸ்டன் கனிம சுரங்க ஒப்பந்தத்தை முழுமையாக ரத்து செய் - தடையை மீறி பொதுமக்கள் பேரணி
செய்தியாளர்: ரமேஷ்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி நாயக்கர்பட்டி அ.வல்லாளபட்டி உள்ளடக்கிய ஐந்தாயிரம் ஏக்கர் பரப்பளவில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மறு ஆய்வு செய்ய மத்திய அரசு அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், மேலூர் பகுதியில் முழுமையாக ரத்து செய்யக் கோரி மேலூர் அருகே நரசிங்கப்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் வரை பேரணியாக சென்று அங்கு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என மேலூர் ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைந்தால் வேளாண்மை பாதிப்படையும் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மேலூர் ஒருபோக பாசன பகுதி அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதையடுத்து இன்று நரசிங்கப்பட்டியில் ஒன்று கூடிய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து மதுரை நோக்கி நான்கு வழிச்சாலையில் பேரணியாக செல்ல முற்பட்டனர். நடைபயண பேரணிக்கு காவல்துறை ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். போலீசார் தடுப்புகளை மீறி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பேரணியாக நான்கு வழிச் சாலையில் மதுரை நோக்கி சென்று கொண்டுள்ளனர்.
காவல்துறையினர் தடுக்க முற்பட்டபோதும் பொதுமக்கள் தடையை மீறி மதுரை நோக்கி பேரணியாக சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ஒருவழி பாதையில் வானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மதுரை எஸ்பி அரவிந்தன், தேனி எஸ்பி சூப்பர் பிரசாத் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.