சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டதால் ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கோவையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி பணி முடிந்து அதிகாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது மணிகண்டனுக்கு ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்தக் காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டு சூலூர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன் வந்தனர். இதனைதொடர்ந்து அவரது உடல் உறுப்புக்களை பிரித்தெடுக்கும் அறுவை சிச்சை நடந்து, அதில் கல்லீரல், சிறுநீரகம்,இதயம், கண்கள் உள்ளிட்ட உறுப்புக்கள் கோவை மற்றும் சென்னை உள்ளிட்ட பகுகளில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக ஏழு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
தகவல்கள் : சுஜாதா, செய்தியாளர் - கோவை